Skip to main content

தமிழகத்தில் வைரலாகும் ‘கேளு சென்னை கேளு’!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

லஞ்ச ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ‘அறப்போர்’ இயக்கத்தின் ‘கேளு சென்னை கேளு’ போராட்டம் சென்னையில் மட்டுமல்ல… தமிழகத்திலும் வைரலாக பரவ இருக்கிறது.

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும், தலைநகரான சென்னையில் தண்ணீர் கிடைக்காமல் தினம் தினம் மக்கள் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு குடம் மெட்ரோ வாட்டர்கூட கிடைக்காமல் வீதிகளில் லாரிகளை சூழ்ந்து அலைமோதிக்கொண்டிருக்கும் சூழலில் இனியும் யாரோ ஒரு ஹீரோ வந்து உங்களைக்  காப்பாற்றுவார்  என்று  நம்பிக்கொண்டு  இருப்பவரா நீங்கள்?  அந்த  ஹீரோ  நீங்கள்தான். சென்னையின்  நீர்நிலைகளை காப்பாற்ற  அறப்போர் இயக்கத்துடன் இணையுங்கள். உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு  நீங்கள் செய்ய இருக்கும்  மிக முக்கியமான  உதவி  இதுவாகத்தான்  இருக்கும்’

''kelu chennai kelu'' Viral in Tamil Nadu


‘முதல்வருக்கு ஒருநாளைக்கு மூன்று லாரி தண்ணீர்… பொதுமக்களுக்கு ஒருநாளைக்கு இரண்டு குடம்தானா?’  

‘என் தண்ணீர் எங்கே?’

என்ற வாசகங்களுடன்  ‘கேளு சென்னை கேளு’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதோடு அதுகுறித்து வரும் 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள், பள்ளிக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டத்தை நடத்த இருப்பதால் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் தமிழக மக்களிடம் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது ‘கேளு சென்னை கேளு’ போராட்டம்.

 

''kelu chennai kelu'' Viral in Tamil Nadu


ஆனால், இந்தப்போராட்டத்திற்கு திடீரென்று சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி மறுத்தத்தால் போராட இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அறப்போர் இயக்கத்தின் சார்பாக நீதிமன்றத்தை நாடியதால்… வரும்- 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் ‘கேளு சென்னை கேளு’ போராட்டத்திற்கு தடைவிதிக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

''kelu chennai kelu'' Viral in Tamil Nadu


போராட்டத்திற்கு அனுமதி வாங்குவதே போராட்டமாகிவிட்டதே என்று அறப்போர் இயக்கத்தின் செயலாளர் ஜெயராம் வெங்கடேசனிடம்   நாம் பேசியபோது, “கேளு சென்னை கேளு என்பதில் இரண்டு ’கேளு’ இருக்கிறதல்லவா? நீங்க அரசை கேளுங்க…. அரசுக்கிட்ட மக்கள்கிட்ட காதுகொடுத்து கேளுங்க. அதாவது, தண்ணீர் பஞ்சம் குறித்து அரசாங்கத்திடம் பொதுமக்களை கேள்வி கேட்கவைப்பது, பொதுமக்கள் சொல்வதை அரசு அதிகாரிகளே ‘கேளு’ங்கள் என்று கேட்கவைப்பது.

தமிழகத்தில் பல பகுதிகளில் எப்படி தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுகிறார்கள்? என்பதை அந்தந்த பகுதி மக்களே வந்து சொல்வது… தண்ணீர் பிரச்சனையிலிருந்து தீர்வை நோக்கி மக்களே ஒன்று சேர்ந்து பல இடங்களில் நீர்நிலைகளுக்கு பொறுப்பெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து சீரமைக்கவைக்க வைப்பதுதான் கேளு சென்னை கேளு போராட்டத்தின் நோக்கம்.  

''kelu chennai kelu'' Viral in Tamil Nadu


குறிப்பாக, பொதுப்பணித்துறை, சென்னை மாநாகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்கவைக்கப்போகிறோம். மேலும், ஒவ்வொரு மழைத்துளிக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். எவ்வளவு சதவீதம் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது? குளம் குட்டைகளில் எவ்வளவு சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது? எவ்வளவு சதவீதம் நீர் கடலுக்கு அனுப்புகிறார்கள்? என்பதற்கான கணக்கை எடுத்து மக்களிடம் தெரிவிக்கவேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளில் விடவேண்டும். நீர் சுழற்சியை அதிகப்படுத்தும் மரம் நடுவதில் ஆரம்பித்து மழை வரும்வரைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதை எப்படி சேமிக்கவேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.  

முதலில், 30- ந்தேதி ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்திற்குதான்  கடந்த 17 ந்தேதி அனுமதி கேட்டிருந்தோம்.  ஆனால், சென்னை காவல்துறையோ, ‘அரசு தடையில்லா தண்ணீர் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு இயக்கமும் அதே, தேதியில் போராட்டம் நடத்த விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும், அறப்போர் இயக்கத்தின் மீது வழக்குகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என்ற காரணங்களைக் கூறி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.

''kelu chennai kelu'' Viral in Tamil Nadu


இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே நாங்கள் பெற்ற தீப்பின் அடிப்படையில் அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, ‘ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டதன் காரணம்தான் தண்ணீர் பஞ்சத்திற்குக்காரணம் என்ற  விழிப்புணர் ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும். மக்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அறப்போர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதால் போராட்டத்திற்கு தடை விதிக்கமுடியாது’ என்று உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதனால், வரும் 30 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து  மதியத்திற்குள்  ‘கேளு சென்னை கேளு’ விழிப்புணர்வு போராட்டம்  எந்த தடையும் இல்லாமல் நடக்கும். எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்ளலாம்” என்றழைக்கிறார் அவர்.

‘கேளு சென்னை கேளு’ விழிப்புணர்வு போராட்டம் சென்னைக்கான போராட்டம் அல்ல… ஒட்டுமொத்த தமிழகத்திற்கான போராட்டம் என்பதால் ‘கேளு தமிழகமே கேளு’ என்றும் விஷ்வரூபம் எடுக்கப்போகிறது.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.