Skip to main content

ஆணவ கொலை - தெலுங்கானா சென்று அம்ருதாவை சந்தித்த கௌசல்யா

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
kausalya


தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரணய் என்ற வாலிபரும், அம்ருதா என்ற இளம் பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்ருதா தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணத்தை செய்து கொண்டார்.
 

வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அம்ருதாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிர் யல்குடா என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கர்ப்பிணி மனைவியை மருத்துவ ஆலோனைக்காக அழைத்து சென்றுள்ளார் பிரணய். 
 

பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிரணய் மற்றும் அம்ருதாவை ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்தொடர்ந்து வந்த அந்த நபர் பிரணய்யை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரணய் உயிரிழந்தார்.

 

telengana


பிரணயை கொலை செய்த வழக்கில, அம்ருதாவின் தந்தை, அவரது சித்தப்பா மற்றும் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர். 
 

அம்ருதா தற்போது அவரது மாமியார் வீட்டில் உள்ளார். கணவனை இழந்து வாடும் அம்ருதாவுக்கு, தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில் கணவர் சங்கரை கண்முன்னே இழந்து வாடும் கௌசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

telengana



கௌசல்யாவுடன் சென்ற அவர் வழக்கறிஞர், அம்ருதாவிடம் உங்கள் கணவரை கொலை செய்ததற்கு என்ன காரணம்? என கேள்வி கேட்டார்.

 
அதற்கு அம்ருதா ‘சாதிதான் பிரச்சனை’ என பதிலளித்தார். 
 

பிரணய் கொலைக்கு காரணமானவர்களை தூக்கில் போட வேண்டும் என்று அம்ருதா கூறினார். இதனைத் கேட்ட கௌசல்யா, நீங்கள் நடந்ததை அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறுங்கள் என்றார்.
 

அப்போது குறுக்கிட்ட கௌசல்யா வழக்கறிஞர், தனது பெற்றோரின் ஜாமீன் மனுவை கௌசல்யா 58 முறை எதிர்த்தார் என்று அம்ருதாவிடம் கூறினார். அவர்களின் சந்திப்பு உருக்கமாக இருந்தது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் - உடுமலை கௌசல்யா

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Social Activist Kausalya Interview

 

சமீபத்தில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனாரே தன்னுடைய மருமகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா...

 

கிருஷ்ணகிரி சம்பவத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இங்கு வர்க்க பேதத்தால் கொலை நிகழ்த்தப்படுகிறது. சொந்த சாதியாகவே இருந்தாலும் நாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை விட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் கொலை செய்வோம் என்கிற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கொலை. சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் நான். இன்றும் போராடிக் கொண்டிருக்கிறேன்.

 

பெரியாருடைய பணிகள் சாதியம் எவ்வளவு கொடூரமானது என்பதை நமக்கு உணர்த்தியது. அவருடைய பணிகளை நாம் அனைவரும் தொடர வேண்டும். ஒருவேளை சங்கருக்கு பதிலாக அன்று நான் கொல்லப்பட்டிருந்தால் அது சாதாரண கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறோம். நிறைய பெண்களுக்கு தங்களுடைய துணையைத் தேடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுவும் ஆணவக் குற்றம்தான். 

 

சாதி வெறி பலருக்கு ஊறிப்போய் இருக்கிறது. சாதி வெறி இல்லாமல் இருக்கும் பலரும் முற்போக்கு இயக்கங்களுடன் கைகோர்ப்பதில்லை. சாதி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கூட இங்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணங்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அப்படி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

 

அரசியல்வாதிகளும் வாக்கு வங்கிக்காக இதில் பல சமரசங்களைச் செய்துகொள்கின்றனர். இந்த விஷயத்தில் உடனடித் தேவை என்பது ஆணவக் கொலைகளுக்கு எதிரான, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவான சட்டங்கள் தான்.

 


 

Next Story

"என் அப்பா இன்னும் உணரல... என் தம்பி மாறிவிட்டான்...” - கௌசல்யா உணர்வலை #2

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
kousalya sankar

 

"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்..." - கௌசல்யா உணர்வலை

உரையாடலின் தொடர்ச்சி...
 

இந்த சம்பவத்திற்கு அடிப்படை காரணம் உங்கள் காதல், சாதியை தாண்டி நீங்கள் காதல் செய்ததால் ஏற்பட்ட கோபம்... இத்தனை வருட சிறை தண்டனையை அனுபவித்த உங்கள் தந்தை, தன் தவறை உணர்ந்திருக்கிறாரா, மனம் மாறியிருக்க மாட்டாரா?  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இல்லை தோழர்... அவர் உணர்ந்ததாக நான் நினைக்கல. நீங்க என்னோட ஃபேஸ்புக் பக்கத்தை பாருங்க. அங்க, இப்படி ஒரு தீர்ப்பை ஆதரித்து, வக்கிரமான மனநிலையோடு எவ்வளவு பேர் கொண்டாடுறாங்க என்று உங்களுக்குத் தெரியும். ஒன்னுமே தெரியாத ஒரு பையன, சின்னச்சாமிகிட்டயும் அன்னலக்ஷ்மிகிட்டயும் பேசியது கூட இல்லாத சங்கரை ஆள் வைத்து வெட்டுனாங்க. நாங்க அப்படி என்ன தப்பு பண்ணோம்? இந்த தீர்ப்பிலும் சாதியம் வேலை செஞ்சுருக்கு. அவுங்க என்னையும்தான் வெட்டணும்னு இதை செய்தார்கள். சங்கரை தனியே வெட்டவேண்டுமென்றால் அவன் தனியாக தினமும் பஸ்ஸில் போனபோது செய்திருக்கலாம். என்னையும் கொல்ல நினைத்த அவர்கள், தவறை உணர்ந்தது போல எனக்குத் தோன்றவில்லை. வெட்டப்பட்ட நான் உயிரோட இருக்கும்போதே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது வேதனையளிக்குது.

 

காலம் எல்லாத்தையும் மாற்றும் என்று சொல்வோம். அவர்களது மனநிலையையும் காலம் மாற்றியிருக்காதா?

இல்லை... என்னுடன் பிறந்த வளர்ந்த என் தம்பி கௌதம். நாங்கள் சின்ன வயசுல இருந்து சாதி குறித்து பேசியதில்லை. எங்களுக்கு சாதி சங்கங்களின் தொடர்பும் இல்லை. ஆனா, இன்னைக்கு அவன் எப்படி மாறியிருக்கான் என்று பார்க்கவே வியப்பா இருக்கு. அவனது ஃபேஸ்புக் பக்கத்தில் போய் பார்த்தால் முழுக்க முழுக்க சாதிப் பெருமை, சாதி வன்மம் நிறைந்திருக்கு. அந்த குடும்பத்தின் சூழல் முற்றிலும் மாறியிருப்பதை என்னால் உணர முடியுது.

 

அவர்கள் உங்களை ஏதாவது தொடர்புகொண்டார்களா?

இல்லை... தொடர்புகொள்ற அளவுக்கு நான் எந்த வாய்ப்பையும் வச்சுக்கல.

 

kousalya sankar parents

 

 

சிறு வயதிலிருந்து அந்தக் குடும்பத்தில் நீங்க வாழ்ந்திருக்கீங்க... அப்பா - மகள் என்ற உறவு இருந்திருக்கும். நேற்று அவர் விடுதலையானபோது எப்படி உணர்ந்தீர்கள்?

எனக்கு அழுகைதான் வந்தது. கட்டுப்படுத்த முடியாத அழுகை. சுற்றியிருந்த எல்லோராலும் ஆற்றப்பட முடியாத அழுகை. ஒரு குற்றவாளி இப்படி எளிதாக வெளியே செல்ல முடியுதே என்ற அழுகை. என்னோட இந்த நிலைக்குக் காரணம் அவுங்கதான். எத்தனை பேர் என்னவெல்லாம் எழுதுனாலும், அடிப்படையில் அவங்கதான் எங்களை இப்படியாக்கியது. அவுங்க ஒரு நிமிடம் யோசிச்சு விட்டு இருந்தா இந்த குமரலிங்கத்தில் ஒரு மூலையில் நாங்க வாழ்ந்திருப்போம்.

 

சட்ட ரீதியாக சரி, மன ரீதியாக உங்களுக்கு உங்கள் பெற்றோரை மன்னிக்கலாம் என்று தோன்றவில்லையா?

இதே கேள்வியை நான் அவுங்ககிட்ட கேக்குறேன். அவுங்க ஒரு நிமிஷம் எங்களை மன்னிக்கணும்னு நினைச்சிருந்தா இன்று நான் உங்களிடம் இப்படி பேசும் நிலையே வந்திருக்காது. ஒரு நிமிஷம் அவுங்க யோசிச்சிருந்தா, நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருந்திருப்போம். அந்த உயிர் அவுங்களுக்கு இவ்வளவு சின்னதா போச்சு?பொத்திப் பொத்தி வளர்த்தோம், ஆசையா வளர்த்தோம் என்று சொல்றாங்க. அப்படி வளர்த்தவங்களுக்கு என்னை வாழ வைக்கணும்னு தோணலையே. விட்டு இருந்தா நாங்க கண்ணுக்குக் காணாத தூரத்தில் போய் வாழ்ந்திருப்போம். ஒருத்தர் போய் சாதி அழியப்போகுதான்னு கேக்குறாங்க. அந்த ஒருத்தருக்குப் பின்னாடி ஒவ்வொருத்தரா ஆயிரம் பேர் ஆகியிருப்பாங்க.

 

உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

உச்சநீதிமன்றத்துல ஒரு வழக்கறிஞரிடம் பேசி வருகிறோம். நீதியை பெற எத்தனை ஆண்டுகளானாலும் தொடர்ந்து போராட உள்ளோம். விடுதலையான அத்தனை பேரும் தண்டனை பெறவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

உங்கள் தாயுமா?

ஆம்.. அவரும் இதில் ஈடுபட்டார்தானே?