Skip to main content

லக்னோவில் சிக்கித் தவிக்கும் 45 தமிழர்கள்! மீட்க போராடும் எம்.பி.

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

k


கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது தாய் மாநிலத்துக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளும் அந்தந்த மாநிலங்களில் சிக்கிக்கொண்டனர்.


தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் 45 பேர் உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 23 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், திருச்சியைச் சேர்ந்தவர்கள் 7 பேர், கடலூர், பெரம்பலூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என உள்ளனர்.


அவர்கள் தங்களிடமிருந்து பணத்தினை வைத்துக்கொண்டு போராடி ரூம்களைப் பெற்றும், உணவுப் பொருட்களைப் பெற்றும் சமைத்துச் சாப்பிட்டு வந்தனர். முதல் கட்ட லாக்டவுன் முடிந்து இரண்டாம் கட்ட லாக்டவுன் போடப்பட்டதும் பயந்து போன இவர்கள் தங்கள் நிலைகுறித்து ஏப்ரல் 17 ஆம் தேதி லக்னோ மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், பிரதமர் நரேந்திமோடிக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கையில் பணமில்லாத நிலையில் தற்போது சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதாக அந்தக் குழுவில் இருப்பவர்கள் நமது 'நக்கீரன்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு வேதனையுடன் கூறினர்.


தமிழகத்தில் இருப்பவர்களைப் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள், பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களை அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். சமீபத்தில் மகாராஷ்ட்டிராவில் இருந்து 127 பேர் தமிழகத்துக்குப் பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆனால் எங்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என வேதனை குரலை வெளிப்படுத்தினார்கள்.


இந்தத் தகவலை உடனடியாக வேலூர் நாடாளமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் துரைமுருகன் (திமுக) கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர் லக்னோவில் துயரத்தில் உள்ள தமிழர்களை அவர்களது மாநிலத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகிஆதித்யா, உத்திரபிரதேச மாநிலத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், மாநில அரசின் சார்பில் லக்னோவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகசுந்தரதுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.


லக்னோவில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் அவர்கள் சொந்த ஊருக்கு வர அனைத்து விதமான முயற்சிகளையும் செய்கிறேன் என நம்மிடம் தெரிவித்தார் எம்.பி கதிர் ஆனந்த்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம்” - முத்தரசன்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Mutharasan said Modi claim that he will eliminate opposition parties is the height of arrogance

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வீதி வீதியாக சென்று வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாச்சிபுரம், பலவஞ்சாத்து குப்பம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்.எல்.ஏ லதா உட்பட இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் பலர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய முத்தரசன்,”தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்த பட வேண்டும்.  தற்பொழுது எனக்கு கிடைத்திருக்கிற தகவல் படி நாகையில் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களில் 300 ரூபாய் பணம் தருகிறேன் என்று கூறி இரண்டு சென்டர்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இது தேர்தல் நடத்தை விதி மீறப்படுவது அப்பட்டமாக  தெரிகிறது. இது குறித்து நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை ஒரு ஜனநாயக முறையாக நடத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. சுதந்திரமாக, சுயேட்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு; மோடியின் உத்தரவுக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு அமைப்பு. ஆனால் நடைமுறையோ, மோடியின் உத்தரவை ஏற்று செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக மாறி உள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய ஆபத்துகளில் இதுவும் ஒன்று தேர்தல் தேதிகளை பிரதமரை கலந்து ஆலோசித்து முடிவு செய்வது என்பது இதுவரை இல்லாத நடைமுறையாக தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது மிகப் பெரிய ஜனநாயக படுகொலை.

1972 ஆம் ஆண்டு கச்சத்தீவினை இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் பொழுது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவை பற்றி பேசுகிற பிரதமர் மற்றும் பாஜகவினர் கடந்த    10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம். 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல் அதை விட்டுவிட்டு இன்று பேசுவது மலிவான முறையில் வாக்குகளை பெற மிக மிக மோசமான முறையாகும். இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாக மக்களின் வாக்குகளை பெற்று விட முடியாது. மோடி அம்பலப்பட்டு நிற்கிறார்.

ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை, 15 லட்ச ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி இவை எதனையும் நிறைவேற்றவில்லை மாறாக மதம், ஜாதி, கடவுளை நம்பி கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, தேர்தல் களத்தில், மக்களுக்கு கடவுள் மேல் இருக்கிற பக்தி, மதத்தின் மீது இருக்கிற நம்பிக்கையை, வைத்து வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒருபொழுதும் வெற்றி பெறாது. தமிழ்நாட்டில் வேலூர் உட்பட பாண்டிச்சேரி ஆகியவற்றில் ஒன்று நள்ளிரவு கூட்டணி, ஒன்று கள்ளக் கூட்டணி இந்த இரண்டு கூட்டணியும் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் நிராகரிப்பார்கள்” என்றார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.