Skip to main content

கரூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க. கோட்டையா ? காங்கிரஸ் கோட்டையா ? 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

கரூர் எம்.பி.தொகுதி பழைய சட்டமன்றத் தொகுதிகள் சீரமைப்புக்கு முன்பு - அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் என இருந்த தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

 

k

 

இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் 6 முறை காங்கிரசும், 6 முறை அதிமுகவும், திமுகவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளன. இதுவரை இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர்கள் யார் யார் ? எப்போது ? 

 

கரூர் எம்.பி. தொகுதி கொங்கு மண்டலத்தின் கடைமடை பகுதி அல்லது ஆரம்ப பகுதி என இரண்டு வகையாகவும் பார்க்கலாம். இங்கே கவுண்டர்கள் மட்டுமே ஜெயித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கவுண்டர்கள், பிறகு பிள்ளைமார்கள், அடுத்து மைனாரட்டி, பிறகு கவுண்டர்கள் தொடர்ந்து அவர்களின் கோட்டையாகவும், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் தொடர்ச்சியாக இந்த தொகுதியை தக்கவைத்து கொண்டுள்ளது. அதிமுக கோட்டையிலிருந்து காங்கிரஸ் தொகுதியாக மாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. 

 

1957 - பெரியசாமி கவுண்டர் - காங்கிரசு.

1957-ல் மதராஸ் மாகாணத்தில் கரூர் மக்களவை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வென்றது. இத்தேர்தலில் 58.45% வாக்குகள் மட்டுமே பதிவானது. சுயேச்சையாக போட்டியிட்ட சேஷய்யனை இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமி கவுண்டர் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

 

1962 - ஆர். ராமநாதன் செட்டியார் - காங்கிரசு.

சுதந்திர கட்சி 1967 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியை கைப்பற்றியது. 1962-ல் வென்ற ராமநாதன் செட்டியார் சுமார் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இத்தேர்தலில் கரூரில் 73.62% வாக்குகள் பதிவானது..

1967 - முத்துச்சாமி கவுண்டர் - சுதந்திரா கட்சி.

 

1971 - கே. கோபால் - காங்கிரசு.
1977 - கே. கோபால் - காங்கிரசு.

சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமநாதனை தோற்கடித்தார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால். 1971 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 71.18% வாக்குகள் பதிவாகியிருந்தது.
கோபால் மீண்டும் 1977 தேர்தலில் வென்றார். இம்முறை 62.26% வாக்குகள்பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் சுமார் 1,45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இத்தேர்தலில் 70.67% வாக்குப்பதிவு நடந்தது. சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்தனர்.

 

1980 - துரை செபாஸ்டியன் - (காங்கிரசு)

அதிமுக வேட்பாளர் கனகராஜை சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் துரை செபாஸ்டியன். இத்தேர்தலில் 67.44% வாக்குகள் பதிவானது.

 

1984 - ஏ.ஆர். முருகையா - (காங்கிரசு)
எட்டாவது மக்களவை தொகுதியில் 68.36% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் கந்தசுவாமியை தோற்கடித்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகையா. பதிவான சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் முருகையா 4.13 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். கந்தசுவாமி இரண்டு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 1984 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 77.25% வாக்குப்பதிவு நடந்தது. இவருடைய மகன் தான் வாசன் முருகையா ரியல்எஸ்டேட் தொழிலும், இன்னோருவர் வாசன் கண் மருத்துவமனையும், வாசன் மெடிக்கல் தொழிலும் செய்து வருகிறார்.

 

t

 

1989 - மு. தம்பிதுரை - (அதிமுக)

1989 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை வென்றார். பதிவான 7.48 லட்ச வாக்குகளில் தம்பிதுரைக்கு 4.84 லட்ச வாக்குகள் கிடைத்தது. திமுகவின் கே.சி. பழனிசாமி 2.45 லட்ச வாக்குகள் பெற்றார். பாமக 3,679 வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் கரூரில் 71.21% வாக்குப்பதிவு நடந்தது.

 

1991 - என். முருகேசன் - (அதிமுக)

பத்தாவது மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகேசன் பதிவான ஏழு லட்சம் வாக்குகளில் 4.75 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் திருநாவுக்கரசு 2.05 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார். பாமக 4,388 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தது.

 

1996 - கே. நாட்ராயன் - (தமாகா)

மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நட்ராயன் கரூரில் 56.12% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் தம்பிதுரை 2.41 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். மதிமுக சார்பில் போட்டியில் டி.பி.மூர்த்தி 8.38% வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளருக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் 71.20% வாக்குகள் பதிவாகியிருந்தது.

 

1998 - மு. தம்பிதுரை - (அதிமுக)

1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் காட்சிகள் மாறின. முந்தைய தேர்தலில் வென்றிருந்த நட்ராயன் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். தம்பிதுரை 43,673 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் 59.84% வாக்குகள் பதிவாகியிருந்தது.

 

c

 

1999 - எம்.சின்னசாமி - (அதிமுக)

1999-ல் மீண்டும் மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சின்னசாமி வெறும் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை வென்றார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்ராயன் 6.33% வாக்குகள் அதாவது 45 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் 62.94% வாக்குகள் பதிவானது.

 

kc

 

2004 - கே. சி. பழனிசாமி - (திமுக)

இரண்டு முறை கரூர் மக்களவை தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்த கே.சி.பழனிசாமி தனது 69-வது வயதில் 2004 மக்களவை தேர்தலில் கரூரில் வென்றார். இம்முறை அதிமுக வேட்பாளரை சுமார் 1.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

 

2009 - மு. தம்பிதுரை - (அதிமுக)

2009 மக்களவை தேர்தலில் .சுமார் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட தம்பிதுரை வென்றார். தேமுதிக வேட்பாளர் ராமநாதன் 51 ஆயிரம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

2014 - மு. தம்பிதுரை - (அதிமுக)

கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் தம்பிதுரை வென்றார். இம்முறை சுமார் 1.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சின்னசாமியை வீழ்த்தினார். தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணன் 76 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நின்ற ஜோதிமணிக்கு 30 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. 13,733 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

ஆறு முறை திமுக - அதிமுக நேரடியாக மோதியுள்ளன. இதில் ஒரே ஒரு முறை மட்டுமே திமுக வென்றது.

 

திமுக ஒரு முறை கரூரில் வென்றுள்ளது. 1989-லிருந்து தம்பிதுரை நான்கு முறை கரூர் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். ஐந்தாவது முறையாக தேர்தலில் நிற்கும் தம்பிதுரை தற்போது தேர்தல் தேதி அறிவிப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி கிராமம் கிராமாக சுற்றி மக்களின் குறைகளையும், கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். பல இடங்களில் மக்கள் அடிப்படை வசதி செய்து தரவே இல்லை என மறிக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் கடந்த 4 முறை ஜெயித்தது போலவே இந்த முறையும் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன் என்கிற நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார் தம்பிதுரை. 

 

j


இதுவரை ஆறு முறை காங்கிரஸ் கட்சி இங்கே வென்றுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இம்முறை கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஐந்தாவது முறையாக தம்பித்துரை தேர்தலில் நிற்கிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராகுகாந்தி சிபாரிசில் ஜோதிமணியை நிறுத்துகிறார்கள். அமுமுக சார்பில் தங்கவேல் என்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அமுமுக பொறுப்பாளர்கள் அதிமுகவில் மீண்டும் இணைந்த நிலையில் இவரை நிறுத்தியிருக்கிறார்கள். 

 

t

 

தற்போது கடைசி 10 வருடங்களாக கரூர் அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக வலம் வந்த செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பில் இருப்பதால் அவருடைய அரசியல் அதிரடியை நம்பியே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் இருக்க வேண்டிய நிலை என்பது தான் தற்போதைய களநிலவரம். 

 

s

 

காங்கிரஸ் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலையில் செந்தில்பாலாஜி அனைத்து ஒன்றியங்களிலும், பூத்கமிட்டி அமைத்து 10 வாக்காளர்களுக்கு 2 பேர் என்கிற விகிதத்தில் ஆட்களை நியமித்து வேலையை துரிதப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள்.


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

'செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு'-அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Senthil Balaji's Bail Petition'-Judge Anand Venkatesh ruled

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு கடந்த (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.