கரூரில் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. அதனைச் சாப்பிட்ட ஒரு மாணவன் முதலில் வாந்தி எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அதனைத்தொடர்ந்து மற்ற மாணவ, மாணவிகளும் வாந்தி எடுத்ததுடன், மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மயக்கமுற்ற10 மாணவ மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இயல்பு நிலையில் உள்ளனர். இருந்த போதிலும், அவர்களை சிறிது நேரம் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வைத்து அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.