கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி இராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ‘உதிரம் உயர்த்துவோம்’ திட்டத்தின் கீழ் இரத்த சோகை கண்டறியும் ஆய்வு முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஹீமோகுளோபின் ஒப்பீட்டு ஆய்வு தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக, ‘உதிரம் உயர்த்துவோம்’ திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மட்டும் 25,000 மாணவர்களிடையே ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு அவர்களில் 17,000 மாணவியர்களுக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்களின் முடிவு பெறப்பட்டு அவர்களில் மிக குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக எளிதாக ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கும் வகையிலும், அதன் முடிவுகள் 1 நிமிடத்தில் பெறப்பட்டு, கையில் இரத்த மாதிரி இக்கருவியில் சேகரித்து அதன் முடிவும், மாணவ/மாணவியர்களின் ஹீமோகுளோபின் மீட்டர் முறையில் செய்தும் அதன் முடிவையும் ஒப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, இதற்கென 3000 மாணவ மாணவியர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை இந்த முறையில் எடுக்கப்படும் 3000 மாணவ மாணவியர்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் முக்கிய வகை கருவிகளை கொண்டு முதன் முதலில் இரத்த சோகை கண்டறியும் ஆய்வு முடிவுகள் நடைபெற உள்ளது. இது சிறப்பாக அமையும் பட்சத்தில் கரூர் மாவட்டம் தான் அனைவருக்கும் முன்னோடி மாவட்டமாக திகழும். நாம் ஏற்கனவே மாணவியர்களின் பெற்றோர்களின் சம்மதத்துடன் 17,000 மாணவிகளுக்கு இரத்த சோகை கண்டறியும் ஆய்வு முடிவுகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இன்று முதல் மாணவிகளுடன் மாணவர்களுக்கும் இரத்த சோகை பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. அதன் மூலம் ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும். உடம்பில் உள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தின் சிவப்பணுக்கள் என்ற ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது. இதன் மூலம் தான் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைவு ஏற்படும் காரணத்தினால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து அதன் காரணமாக நமது செயல்பாடுகளும் திறமைகளும் குறைந்து விடுகிறது. மாணவர்களால் சிறப்பாக சிந்திக்க முடியாது; செயல்பட முடியாது; படிக்க முடியாமல் போய்விடும். வளர்ச்சியும் குறைவாக இருக்கும். உடம்பில் இருக்கின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இரத்த சோகை ஏற்படுவதன் காரணத்தினால் தான்.
இரத்த சோகை என்பது சாதாரண வியாதியாக தான் தெரியும் ஆனால் எல்லா பிரச்சனைகளுக்கும் இதுதான் காரணம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் இரத்த சோகை வராமல் தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு இரும்பு சத்து மிக்க காய்கறிகள், கீரைகள், இறைச்சி வகைகளை சாப்பிட வேண்டும். குடல் புழு மாத்திரை வருடத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். மாணவிகள் கூச்சப்படாமல் உங்களது மாதவிடாய் காலத்தை சரியாக கண்காணித்து அது குறித்து பிரச்சனைகள் ஏற்பட்டால் தனது தாயிடமோ அதன் மூலம் மருத்துவரிடம் கூறி ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் வாரா வாரம் வியாழக்கிழமை இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் இதன் மூலம் இரத்த சோகையை தடுக்க முடியும். போகுசோயின் குறைபாடுக்கு ஏற்றவாறு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இரத்த சோகை இல்லாத நிலையை உருவாக்கி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதை உங்கள் தோழிகளிடம், தாய், தந்தையிடம் சொல்லி அவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். அப்பொழுதுதான் வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் சீராக இருந்தால் அனுமியா என்ற இரத்த சோகை இல்லாமல் போய்விடும் நீங்களும் அனைத்து துறைகளிலும் திறமையுடன் செயல்படுவீர்கள். ஆகவே கரூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே இரத்த சோகை கண்டறியும் திட்டத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் முன்மாதிரி மாவட்டமாக எடுத்துச் செல்வதற்கு மாணவ மாணவியர்கள் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. ரமா மணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சந்தோஷ் குமார், தேசிய நலவாழ்வு குழும விஜய புஷ்பா, தலைமையாசிரியர் ஜோதி முருகன், கரூர் வட்டாட்சியர் திரு. சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.