Skip to main content

திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நடந்த சேஸிங்! - குற்றவாளிகளைத் தட்டித் தூக்கிய போலீஸ்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

karur Police arrested 3 accused

 

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனை விசாரித்த மதுரை மாவட்ட போலீஸுக்கு இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி(20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாலிக்ராஜ்(28) ஆகிய மூன்று நபர்கள்தான் என்பது தெரியவந்தது. ஆனால், அந்த மூவரும் காவல்துறையினரிடம் சிக்காமல் சுற்றித் திரிந்து வந்தனர். இந்நிலையில், மதுரை மாவட்ட போலீஸாருக்கு இந்த மூன்று குற்றவாளிகளும் கரூர் மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. உடனே மதுரை காவல்துறை சார்பில் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு, ‘மதுரையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாண்டட் அக்கியூஸ்ட்கள் ஆனந்தராஜ், தாலிக்ராஜ், ரவி மூனு பேரும் உங்க மாவட்டத்துல இருக்காங்க அவங்கள பார்த்ததும் அரஸ்ட் பண்ணுங்க’ என புகைப்படத்தோடு தகவல் கொடுக்கப்பட்டது.

 

தகவல் கிடைத்ததும் அலர்ட்டான கரூர் நகர போலீஸார் நகரப் பகுதியில் தீவிர வாகனச் சோதனையைத் துவங்கினர். அப்போது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதனைப் பார்த்த கரூர் போலீசார், அவர்களை மறித்துள்ளனர். ஆனால், அவர்கள் நிற்காமல் தப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை விரட்டத் தொடங்கினர். அப்போது அவர்கள் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலை அரவக்குறிச்சி நோக்கி வேகமாகச் சென்றுள்ளனர். 

 

அதனை நோட்டமிட்ட ரோந்து போலீஸார், அவர்களை விடாமல் சேஸ் செய்தனர். அதேசமயம், போக்குவரத்து போலீசாருக்குத் தகவலை பாஸ் செய்தனர். அந்தத் தகவலை அடுத்து தடாக்கோவில் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்திச் சென்றனர். முன்னே குற்றவாளிகள் மூவரும் பைக்கில் சீறிப் பாய, பின்னே காவல்துறையின் காரும், பைக்கும் வேகமெடுக்க அந்தச் சாலையில் இருந்த மக்கள் ஒரு நிமிடம் என்ன சினிமா எதுவும் ஷூட் பண்றாங்களா என நினைக்கும் அளவுக்கு சேஸிங் இருந்தது. தடாக்கோவில் பகுதியில் குற்றவாளிகளின் பைக்கை முன்பக்கமாகச் சென்று போலீஸார் மறிக்க, போலீஸ் வாகனத்தில் மோதி குற்றவாளிகளின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. ஆனந்தராஜ், தாலிக்ராஜ், ரவி ஆகிய மூவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

 

பிடிபட்ட அவர்களிடமிருந்து கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பு, இரு சக்கர வாகனத் திருட்டு எனப் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களை சினிமா பாணியில் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போலீசார் துரத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.