Skip to main content

சிறுமிக்கு பாலியல் தொல்லை! தலைமறைவான மருத்துவரை கைது செய்த தனிப்படை! 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Karur girl child case... police arrested under pocso act

 

கரூரில் பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை ஒன்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இங்கு மருத்துவர் ரஜினிகாந்த் என்பவர் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக உள்ளார்.

 

இந்த மருத்துவமனையில் 40 வயதான பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றிவந்தார். அந்தப் பெண் காசாளர் மருத்துவமனையில் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவளி போனஸ் மற்றும் மாத சம்பளம் போன்றவற்றை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் காசாளர் பணியிலிருந்து நின்றுவிட்டிருக்கிறார்.  

 

அந்தப் பெண் காசாளரின் இரண்டாவது மகள் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயுடன் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி அங்கு சென்றுவருவதில், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாலை மருத்துவமனை மேலாளர் சரவணன் என்பவர், மாணவியின் செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, ‘தீபாவளிக்கு அம்மாவிற்கு சம்பளம், போனஸ் தரவில்லை. அதனால், மருத்துவமனைக்கு நீ மட்டும் வந்து வாங்கிக்கொள்’ எனக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து, அந்த மாணவி மருத்துவமனைக்குத் தனியாகச் சென்று அங்கு மருத்துவர் ரஜினிகாந்த் அறைக்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது மருத்துவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த மாணவி மருத்துவமனையில் நடந்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

 

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் மருத்துவர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து, அம்மருத்துவமனை மேலாளர் சரவணன், மருத்துவர் ரஜினிகாந்த் இருவரும் தலைமறைவானார்கள். கரூர் தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மேலாளர் சரவணனை நேற்று (16.11.2021) தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மருத்துவர் சரவணனை தீவிரமாக தேடிவந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மருத்துவர் ரஜினிகாந்தையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.