Skip to main content

இளைஞர் மீது வழக்குப்பதிவு; மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த குடும்பத்தினர்

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

karur district police filed new case for young man issue

 

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் இளைஞர் ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இளைஞரின் குடும்பத்தினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36). இவருக்கு மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். செங்குந்தபுரம் பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு மருந்தகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மகேந்திரன், அவரது நண்பர் சுரேஷ் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர்கள் தினமும் தாந்தோணிமலை காவல்நிலையத்திற்குச் சென்று  காலை, மாலை என இரு வேளையும் கையெழுத்திட்டு வருகின்றனர். 17-வது நாளாக கையெழுத்திடுவதற்காக தாந்தோணிமலை காவல்நிலையத்திற்கு இன்று காலை வழக்கம்போல் சென்றவரைப் பிடித்துவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் தாந்தோன்றிமலை காவல்நிலையம் முன்பு திரண்டனர். போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மேலும் ஒரு வழக்கில் மகேந்திரனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரிய காரணம் ஏதும் கூறாமல் தனது கணவரை போலீசார் கைது செய்ததாகக் கூறி கைக்குழந்தையுடன் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்ட நிலையில், மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை தாந்தோணிமலை காவல்நிலைய போலீசார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.