கரூர் அதிமுக நிர்வாகி கொலை; 3 பேர் போலீசில் சரண்

karur district admk taluk level  executive incident  

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசிப்பவர் வடிவேல். அதிமுகவின் வட்ட செயலாளரான இவரைகடந்த 4ம் தேதி இரவு திருமாநிலையூர் என்ற இடத்தில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாளால் கழுத்துப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வடிவேல் உயிரிழந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில்,வடிவேல் முத்துராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவாவிடம், 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது பேசவில்லை என கூறி தேவாவை வடிவேல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தேவா தனது சொந்த ஊரான, லாலாபேட்டை அருகே உள்ள பொய்கைப் புதூரிலிருந்து சிலரை வரவழைத்து வடிவேலுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநர் தேவா உள்ளிட்டோரை தேடி வந்த நிலையில் இன்று, ஆட்டோ ஓட்டுநர் தேவா என்ற மகாதேவன் மற்றும் அவரது சகோதரர் பாலசுப்பிரமணியன் மற்றும் சேகர் ஆகிய 3 பேரும் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்கள் மூன்று பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில்3 பேரும் சேர்ந்து வடிவேலுவை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

admk karur police trichy
இதையும் படியுங்கள்
Subscribe