Skip to main content

பதுங்கிப் பாய்ந்த கருணாஸ்! மிரண்டுபோன எடப்பாடி!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

கடந்த 23-ந்தேதி அதிகாலை சாலிகிராமத்தில் உள்ள முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்.எல்.ஏவுமான கருணாஸின் வீட்டுக் கதவைத் தட்டியது காவல்துறை. முதலமைச்சரையும், காவல்துறை அதிகாரியையும் மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்வதாக அறிவித்தார் நுங்கம்பாக்கம் ஏ.சி.முத்துவேல்பாண்டியன். 

 

 “சிறைக்கு அஞ்சாத சீவலப்பேரி பாண்டி வம்சத்தை சேர்ந்தவன் நான், வாங்க போகலாம்னு” வான்டட்டாக வந்து வண்டியில் ஏறினார் கருணாஸ். அதே கருணாஸ்தான் இன்று கைதுக்குப் பயந்து நெஞ்சுவலி என்று கூறி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார். 

 

KARUNAS

 

முதலமைச்சரை மிரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக திருவல்லிக்கேணி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

 

இந்த 2 வழக்குகளிலும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாசுக்கு, எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்குப் பிறகாவது சும்மா இருப்பார் கருணாஸ் என்று நினைத்தது எடப்பாடி அரசு. ஆனால், கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்று ஊடகங்களில் பேசி அனலைக் கிளப்பினார். பற்றாக்குறைக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் கருணாஸ் வீட்டிற்கே சென்று ஆதரவு தெரிவித்தனர். 

 

KARUNAS

 

இதனால் கொதித்த ஆளுந்தரப்பு, போன வருஷம் நெற்கட்டும்செவலில் தகராறு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் (398/2017 – IPC 147(3)) கருணாஸைக் கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

 

சுப்பையா பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில், ஓராண்டிற்குப் பிறகு கைது செய்ய புளியங்குடி போலீஸார் சென்னை வந்ததால், நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் கருணாஸ்.

மேலும், சபாநாயகர் தனபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி, அவரது எம்.எல்.ஏ பதவியைப் பறிக்கவும் ஆளுந்தரப்பு முயற்சி செய்து வருகிறது. இதை அறிந்த கருணாஸோ, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டப்பேரவை செயலாளருக்கு மனு அனுப்பி அதிரடி காட்டி உள்ளார்.

 

KARUNAS

 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு வர குறைந்தபட்சம் 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்களோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது ஆளும் தரப்புக்கு. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருணாஸை மருத்துவமனைக்கே சென்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ பார்த்தது ஆளுந்தரப்பை மிரள வைத்துள்ளது. அதனால்தான், ஜாமின் நிபந்தனையை கருணாஸ் மீறினாலும், கடுமை காட்ட வேண்டாம் என்று காவல் துறையிடம் சொல்லியிருக்கிறது மேலிடம்.

 

இதற்கிடையே, புளியங்குடி வழக்கில் முன்ஜாமின் கேட்டு கருணாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அக்டோபர் 8-ஆம் தேதி வரை கருணாஸைக் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. எனவே, கருணாசுக்கு முன்ஜாமின் கிடைக்குமா? காவல்துறை கைது செய்யுமா? என்பது  அக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகே தெரியும்!

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.