Skip to main content

“சனாதனத்திற்கும் சாமி கும்பிடுவதற்கும் சம்பந்தமில்லை..” - கார்த்திக் சிதம்பரம் எம்.பி.

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Karthik Chidambaram has said he agrees with Udhayanidhi's talk on Sanathanam

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர். 

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார். மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார். 

 

இந்த பேச்சுக்கு ஆதரவு கருத்துக்கள் குவிந்து வரும் நிலையில், அதே நேரம் சிலர் மிரட்டல்களும் விடுக்கின்றனர். சனாதனத்திற்கு எதிராகப் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாயை சன்மானமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் கருத்துடன் தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம், “சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சனாதனம் என்றால் ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் என்று தான் அர்த்தம். அந்த வகையில் உதயநிதியின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். நானும் கோவிலுக்கு செல்கிறேன். கோவிலுக்கு செல்வதற்கும் சாமி கும்பிடுவதற்கும், சனாதனத்திற்கும் என்ன சம்பந்தம். பாஜக தலைவர் அண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தார்களா அல்லது சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தார்களா..? சனாதனத்திற்கும் சாமி கும்பிடுவதற்கும் சம்பந்தமில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்