Skip to main content

தமிழ்நாடு போலீசாரிடம் சரணடைந்த கர்நாடகா பெண் மாவோயிஸ்ட்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா பகுதியில் இயங்கும் மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் சந்தியா. தற்போது 39 வயதாகும் இவருக்கு இயக்கத்தில் பிரபா, நேத்திரா, மது என்கிற பெயர்களும் உண்டு. இவரது கணவர் பி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவின் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி கேரளா சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சந்தியா, தான் சரணடைய விரும்புவதாக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக தமிழ்நாடு காவல்துறைக்குத் தூதுவிட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கு மண்டலத்துக்கான க்யூ பிரிவு போலீசாருக்குத் தகவல் தந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை பாதுகாப்பாக தமிழ்நாடு வரவைத்த போலீசார், முதற்கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் வேலூர் சாரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபுவிடம் ஒப்படைத்தார்.

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபு, “சந்தியா மீது 40 வழக்குகள் உள்ளன. அவர் சரணடைந்துள்ளார். அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கைதான நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சந்தியா, குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முடிவுசெய்து சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்கள் சரணடைந்தால் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான வசதிகள் செய்துதர அரசு அறிவித்துள்ளது. அதன்படி அவருக்கான நிதியுதவி வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். கர்நாடகா காவல்துறை இவரை கைது செய்ய முயன்றால் நாங்கள் இவரை அவரிடம் ஒப்படைக்க மாட்டோம். கர்நாடகாவில் உள்ள வழக்குகளை இவர் எதிர்கொண்டாக வேண்டும்; அதற்கான உதவிகளை நாங்கள் செய்வோம். இவர் வேலூரில் உள்ள மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.