Skip to main content

தமிழ்நாடு போலீசாரிடம் சரணடைந்த கர்நாடகா பெண் மாவோயிஸ்ட்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா பகுதியில் இயங்கும் மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் சந்தியா. தற்போது 39 வயதாகும் இவருக்கு இயக்கத்தில் பிரபா, நேத்திரா, மது என்கிற பெயர்களும் உண்டு. இவரது கணவர் பி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவின் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி கேரளா சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சந்தியா, தான் சரணடைய விரும்புவதாக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக தமிழ்நாடு காவல்துறைக்குத் தூதுவிட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கு மண்டலத்துக்கான க்யூ பிரிவு போலீசாருக்குத் தகவல் தந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை பாதுகாப்பாக தமிழ்நாடு வரவைத்த போலீசார், முதற்கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் வேலூர் சாரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபுவிடம் ஒப்படைத்தார்.

 

Karnataka woman  surrenders to Tamil Nadu police

 

இதுக்குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபு, “சந்தியா மீது 40 வழக்குகள் உள்ளன. அவர் சரணடைந்துள்ளார். அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கைதான நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சந்தியா, குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முடிவுசெய்து சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்கள் சரணடைந்தால் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான வசதிகள் செய்துதர அரசு அறிவித்துள்ளது. அதன்படி அவருக்கான நிதியுதவி வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். கர்நாடகா காவல்துறை இவரை கைது செய்ய முயன்றால் நாங்கள் இவரை அவரிடம் ஒப்படைக்க மாட்டோம். கர்நாடகாவில் உள்ள வழக்குகளை இவர் எதிர்கொண்டாக வேண்டும்; அதற்கான உதவிகளை நாங்கள் செய்வோம். இவர் வேலூரில் உள்ள மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.