Skip to main content

ஜெ-வின் வைரங்களைத் தேடி சோதனையா..? பதட்டத்தில் காரைக்குடி வியாபாரிகள்!!!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

 

   " ஜெயலலிதாவோட வைரம் இங்க இருக்காம்ல..! கோடிக்கணக்கான ரூபாய்னு பேசிக்கிறாங்க.. நம்ம ஊரிலுள்ள வியாபாரிகள் தான் வாங்கி வைச்சுருக்கிறதாக பேசிக்கிறாங்க." என்ற பேச்சு நகரத்து மக்களை சென்றடைந்து ஆச்சரியப்படுத்திய வேளையில், வியாழக்கிழமை இரவில் ஆரம்பித்து, தற்பொழுது வரை நீடித்திருக்கும் வருமானவரித்துறை சோதனையும் அந்த பேச்சுக்கு உயிரூட்டியுள்ளது.

 

 Government officials




பாரம்பரியத்திற்கும், தரத்திற்கும் என்றும் குறைந்ததல்ல செட்டிநாட்டு தங்க வைர ஆபரணங்கள். இத்தகையப் பெருமைமிகு செட்டிநாட்டு தங்க வைர ஆபரணங்களை இன்றுவரை தேடி பிடித்து வாங்காத பிரபலங்களே இல்லை எனலாம்.! அந்தளவிற்கு இங்கு வைர நகைகள் பிரசித்தம். பரந்து விரிந்த செட்டிநாட்டுப் பகுதி எனினும் தங்க வைர ஆபரணங்களுக்கான வணிக இடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மட்டுமே.! இங்கு தான் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மும்பைக்கு இணையாக வைரங்களுக்கான சந்தை அதிகம். இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வைரங்கள் இவை என ஏறக்குறைய 2000 கேரட் எடையுள்ள வைரங்கள் காரைக்குடியில் விற்பனைக்காக வந்துள்ளது என்கின்ற செவிவழி செய்தி நகரமெங்கும் வேகமாக பரவி வந்தது. ஜெயலலிதாவோட வைரமா.? என்ற கேள்வி ஒரு பக்கம் இருப்பினும், அதனை வாங்க பலர் முயற்சியடைந்ததும் தகவலாக கசிந்தது.



 

 

    இது இப்படியிருக்க,  வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு வருமான வரித்துறை இணை இயக்குனர் பத்மாவதி தலைமையில் மதுரை, ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சுமார் 12 பேர் கொண்ட குழு, காரைக்குடி அம்மன் சன்னதியிலுள்ள தங்க வைர ஆபரணக்கடை, மகர்நோன்பு திடல் மற்றும் சூடாமணிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் என மூன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் தற்பொழுது வரை விடாமல் சோதனையிட்டு வருகின்றனர்.. தங்க வைர ஆபரண விற்பனையில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடை பெற்று வருவதாக கூறப்பட்டாலும் நீடிக்கும் இந்த சோதனை ஜெ-வின் வைரத்தை தேடியா.? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. இதே வேளையில், " இங்கு மட்டுமல்ல சோதனை..! குறிப்பிட்ட சிலர் மட்டும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஜெயலலிதாவோட வைரங்களை வாங்கியிருக்க முடியாது. ஆதலால் மகர் நோன்பு அக்ரஹாரம், வடக்கு வல்லம்பர் தெரு, கல்லுக்கட்டி கிழக்கு மற்றும் கல்லுக்கட்டி வடக்குப் பகுதியிலுள்ள வியாபாரிகள் தொடர்பில் சோதனையிட்டால் உண்மை நிலை தெரியும் என்பதால் அங்கும் விரைவில் சோதனை நிச்சயம்." என்கின்றார் வருமான வரித்துறையிலுள்ள அதிகாரி ஒருவர். இதனால் இப்பகுதியிலுள்ள வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.


 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது. 

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.