Skip to main content

தனியார் பேருந்து ஓட்டுனர்களால் காவு வாங்கப்படும் மனித உயிர்கள்! மோட்டார் வாகன சட்டத்தின் குளறுபடி காரணமா..?

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

திருப்பூரில் தனியார் நிறுவன செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இடையர் தெருவை சேர்ந்த அண்ணாதுரை. மாதந்தோறும் சம்பள பணத்தை மட்டும் தவறாமல் குடும்ப செலவிற்கு அனுப்பி வைத்துவிட்டு, வறுமையின் காரணமாக நேரில் வர முடியாமல் போனில் மட்டுமே தனது மனைவி மக்களுடன் பேசி வந்துள்ளார்.
 

karaikudi incident


6 மாதத்திற்கு பிறகு தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த அண்ணாதுரை நேற்று காலை திருப்பூர் செல்ல காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார். திருப்பூர் பேருந்தில் ஏற நடந்து சென்ற அண்ணாதுரையின் மீது அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பாரதி என்ற தனியார் பேருந்து மோதி தூக்கி வீசியது. கண்ணிமைக்கும்  நேரத்தில் நடந்த விபத்தால் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் என்ன நடந்தது என்பது அறியாமலேயே ஒரு உயிர் பறிக்கப்பட்டது.

இந்த பரிதாபம் ஒருபுறமிருக்க கடைமையே கண்ணாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வலை கட்டி பிடித்துக் கொண்டிருந்தார்கள் காரைக்குடி போலீஸார். நமது நாட்டின் காய்ந்து பிய்ந்து போன மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த பேருந்து ஓட்டுனர் அருண் நாளையே மறுபடியும் பேருந்தை இயக்க ஆரம்பித்து விடுவார். புதிய மோட்டார் வாகன சட்டமானது வாகன பதிவு கட்டணம், ஓட்டுனர் உரிமம் பதிவு கட்டணம், வாகன புதுபித்தல் பதிவு கட்டணம் போன்ற அரசின் வருவாயை பெருக்கும் முனைப்பில் கட்டணத்தை உயர்த்தி, லாப நோக்கை அடிப்பையாக கொண்டு செயல்படுகிறதே தவிர, சட்டத்தை அலட்சியப்படுத்தி இதுபோன்ற உயிரிழப்புகளையும், மிகப் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்களை தண்டிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மறுக்கிறது.


சட்டத்தை அலட்சியப்படுத்துவதாலும், விபத்துகளை ஏற்படுத்தும், குறிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இலகுரக வாகன, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க, மோட்டார் வாகன  சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படாவிட்டால், அதிகப்படியான சாலை பாதுகாப்பு வார விழாக்கள் நடத்தினாலும், உயிர் பலிகளை தடுப்பது என்பது கடலில் கலக்கும் நீரைப் போல வீணாகித்தான் போகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்