Skip to main content

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி!- கரோனா விதிகளை முழுமையாகப் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

karaikal district, thirunallar sanipeyarchi celebration chennai high court order

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, 48 நாட்கள் நடைபெறும் விழாவை, கரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

டிசம்பர் 27- ஆம் தேதி, சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில், அன்று முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி வரை, சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோவில் செயல் அலுவலரும் முடிவெடுத்தனர். கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், கோவிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்து, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 

சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது, பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி, கோவிலின் ஸ்தானிகர்கள் சங்கத் தலைவரான எஸ்.பி.எஸ்.நாதன், புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆட்சியர், கோவில் செயல் அலுவலர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு நவம்பர் 27- ஆம் தேதி மனுக் கொடுத்தார்.இதன்பின்னர், அரசின் முடிவிற்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாதன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

karaikal district, thirunallar sanipeyarchi celebration chennai high court order

இந்த வழக்கில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில்,‘சனிப்பெயர்ச்சி தினமான டிசம்பர் 27- ஆம் தேதி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளோம். நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து, மீதமுள்ள 48 நாட்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் கோவிலுக்கு வெளியில் வழங்கப்படும். 

 

மேலும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசை, மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பக்தர்களைக் கண்காணிக்க, 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில், கோவிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்.’ என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த 48 நாட்களில், தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதிச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

‘அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும், தரிசனத்திற்கு ஒரு நாள் எத்தனை பேரை அனுமதிப்பார்கள்?’இந்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்து,‘முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக, புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை, டிசம்பர் 24- ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு கூட்டி முடிவெடுக்க வேண்டும்.’ என உத்தரவிட்டார்.

 

கரோனா தடுப்பு நடைமுறைகளை, அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி, வழக்கை முடித்து வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்