Kanyakumari woman arrested in child case

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியில் திருமணத்தை மீறிய உறவால், ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில் ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குளக்கச்சி பகுதியில் கொத்தனார் வேலை செய்யும் ஜெகதீஷ் (36) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சவிதா (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் சவிதாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் செல்போன் ராங் கால் மூலம் மாராயபுரத்தைச் சேர்ந்த சுனில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி பழகியுள்ளனர். இது ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது. மேலும், சுனில் மார்த்தாண்டம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் இருவரும் நேரடியாகவும் பேசி வந்துள்ளனர்.

இதில் சவிதா, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், பட்டப்படிப்பு படித்து முடித்து வீட்டில் இருப்பதால் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி சுனிலும் தீவிரமாக சவிதாவை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணமான இந்து பெண்கள் அடையாளமாக நெற்றி தலை முடி கீழ் பொட்டு வைப்பது வழக்கம். ஆனால் சவிதா, சுனிலிடம் வீடியோ காலில் பேசும் போதும் அவரை சந்திக்க செல்லும் போதும் அந்த பொட்டு வைக்கமாட்டாராம்.

Advertisment

இந்த நிலையில் சவிதா, சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போது சுனில் ஏதேச்சையாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது சவிதாவின் நெற்றி முடியின் கீழ் பொட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, ‘உனக்கு திருமணமாகி விட்டதா?’ என கேட்டுவிட்டு சுனில் கோபமாக சென்று விட்டாராம். அதன்பிறகு சுனிலுக்கு சவிதா போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை. அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சவிதா, சுனிலின் காய்கறி கடைக்கு சென்று அழுது புலம்பியுள்ளார்.

இனி மேலும் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள்இருக்கிறது. ஆனால் நீ எனக்கு வேணும். அதற்காக நான் எதையும் இழக்க தயாராக இருக்கிறேன் என கதறியுள்ளார். இதை கேட்ட சுனில் உன்னையும் எனக்கு மறக்க முடியவில்லை அப்படியென்றால் உன் கணவனையும் குழந்தைகளையும் விட்டுட்டு என்னுடன் வா என்றிருக்கிறார். அதற்கு சவிதா சரி என்று சம்மதித்து இருக்கிறார்.

இதையடுத்து சுனிலுடன் போக முடிவெடுத்த சவித்தா, நேற்று (6-ம் தேதி) மாலை இரண்டு குழந்தைகளுக்கும் உப்புமாவுடன் எலி விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார். இதில் கொஞ்ச நேரத்தில் இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது ஆண் குழந்தை வாயில் இருந்து நுரை தள்ளி மயக்கமடைந்துள்ளான். உடனே வேலைக்கு போன கணவர் ஜெகதீஷ்க்கு போன் செய்து குழந்தை திடீரென்று நுரை தள்ளி மயக்கமடைந்துவிட்டது என கூறியதால் ஜெகதீசும் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குழந்தையை தூக்கி கொண்டு தனியார் மருத்துவமனைக்கு போனார். அங்கு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால், பின்னர் குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இரவு முதல் குழந்தையான சஞ்சனாவும் மயக்கம் போட்டு விழுந்தது. அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் சவிதாவின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, சுனிலுடன் தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சவிதாவை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை கொலை செய்த காரணத்தையும், சுனிலுடன் இருந்த தொடர்பையும் கூறினார். இதையடுத்து போலீசார் சவிதாவையும் சுனிலையும் கைது செய்தனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.