Skip to main content

முதல்வருக்காக போடப்பட்ட சாலை, ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காத அவலம்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

kanyakumari road issue

 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை இரண்டு முறை தள்ளிப்போனதால், மூன்றாவது முறையாகக் கடந்த 14ஆம் தேதி அவர் வருவது உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் வந்து செல்லும் சாலையில் உள்ள குண்டு குழிகளை நிரப்பி, புதிய சாலையை இரவு பகலாக போட்டனர். 

இந்த நிலையில், முதல்வரின் தாயார் திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்ததால் முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டது. முதல்வர் வந்திருந்தால் நிகழ்ச்சி நடக்க இருந்த நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் தார் சாலைகளும் வேகமாகப் போடப்பட்டன. அந்தத் தார் சாலைகள் அடுத்த நாளே உடைந்து பெயா்ந்தன.

 

இதனால், ஒரு நாள்கூட தாக்குப் பிடிக்கவில்லை என அந்தச் சாலையைப் போட்ட அதிகாரிகள் மீது பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கிடையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏக்கள் தி.மு.க சுரேஷ்ராஜன், காங்கிரஸ் ராஜேஷ்குமார் இருவரும் பெயா்ந்துகிடந்த சாலைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர்கள் அந்தச் சாலையைக் கைகளால் தோண்டி வாரி எடுத்தனர்.


இது குறித்து எம்.எல்.ஏக்கள் கூறும் போது, "முதல்வர் வருகைக்காக அமைக்கபட்ட பந்தல்கள்கூட இன்னும் அகற்றப்படவில்லை, அதற்குள் சாலைகள் பெயா்ந்துவிட்டன. அந்தளவுக்கு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி தரமற்ற சாலைகளை அமைத்துள்ளனர். அந்தச் சாலையைப் போட்ட ஒப்பந்தக்காரா்கள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.