Skip to main content

காதல் தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை..!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Kanyakumari couple passes away

 

தமிழகத்தில் கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சனை, வேலை கிடைக்காத ஏக்கம், காதல் தோல்வி என பல்வேறு சம்பவங்களால் மனமுடைந்து கொஞ்சமும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதேபோல் காதல் திருமணம் செய்த தம்பதிகள் குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடி சிதம்பர நகரைச் சேர்ந்தவர் மகா வைகுண்டன் (26). நெல்லையைச் சேர்ந்தவர் கஸ்தூரி (26) இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து அறிமுகமாகி, தொடர்ந்த அந்தப் பழக்கம் வழக்கம் நாளடைவில் காதலர்களாக மாறி, பின்னர் திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளாகிறது. சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணி செய்து வந்த மகா வைகுண்டன், குமரி மாவட்டம் சாமிதோப்பில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவியுடன் தங்கி இருந்து, அந்தப் பணிகளைச் செய்து வந்தார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருவரும் கோட்டார் பகுதிக்கு இடமாறிச் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதற்காகப் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும், தினமும் இருவரும் கோவில்களுக்குச் சென்றும் பிரார்த்தனை செய்து வந்தனர். மேலும் குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் சந்தோஷமாகதான் இருந்து வந்துள்ளனர்.

 

குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது உறவினர்களும் மற்றும் நண்பர்களும் குழந்தை இல்லாததைப் பற்றியும் அது சம்மந்தமான சிகிச்சைகளைப் பற்றிப் பேசி வந்ததும் மனசுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்துவதாக, பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி வேதனைப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில்தான், 14-ம் தேதி அந்த தம்பதிகள், குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, மாலை வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் 15-ம் தேதி வெகு நேரமாகியும் வீட்டுக் கதவு திறக்காததாலும் வெகு நேரமாக செல்ஃபோனும் அடித்துக் கொண்டிருந்ததாலும் அக்கம் பக்கத்தினர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது  மகா வைகுண்டனும் கஸ்தூரியும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி தற்கொலை செய்து இறந்து கிடந்தனர். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்