பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டங்களும் தண்டனைகளும் எவ்வளவோ கடுமையானபோதிலும் சில ஆண்கள் அதைத் தொடா்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த நிலையில், குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே வெள்ளச்சி விளையில், 'கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ்' கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்குத் தினமும் பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி மாணவிகள் பெற்றோர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். இது குறித்து நம்மிடம் பேசிய மாணவிகள், “இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 150 மாணவிகள் படித்துவருகிறோம். கல்லூரி நிர்வாகம் செய்தித்தாளில் விளம்பரம் போட்டும் எங்களை புரோக்கர் மூலமாகவும் தொடர்புகொண்டு மூளைச்சலவை செய்து கல்லூரியில் சோ்த்தனர்.
மூன்று வருட படிப்புக்கு, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் என்று மூன்றாண்டுக்கும் சேர்த்து ரூ.60 ஆயிரம், சாப்பாட்டுக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தமாக வாங்கி விட்டனர். எங்களுடைய +2 பள்ளிச் சான்றிதழையும் வாங்கிவிட்டனர். இந்த நிலையில் கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகளின் அங்கிகாரங்கள் எதுவும் இல்லையென்பது இரண்டாவது ஆண்டு படிக்கும்போதுதான் தெரியவந்தது. அதேபோல், விடுதி வசதியும் இல்லை. ரேசன் அரிசியை வாங்கிதான் சாப்பாடு போடுவார்கள். அதுவும், ஒரு கூட்டு கறியோடு முடித்து விடுவார்கள்.
மேலும், தரமான ஆசிரியர்கள் ஒருத்தர் கூட இல்லை. லேப், எக்ஸ்-ரே, நூலகம் என எதுவும் கிடையாது. வெளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் எங்களை வேலைக்கு அனுப்பி மருத்துவமனை கொடுக்கிற ரூ.5 ஆயிரம் சம்பளத்தையும் அவர்களே எடுத்து விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்டபோது எங்களை கல்லூரி தாளாளர் ஆன்ட்ரோ செல்வகுமாரும் அவரது மனைவியான கல்லூரி முதல்வரும் மிரட்டினார்கள்.
இந்தநிலையில் கல்லூரி விடுதியின் மாடியில், தாளாளரின் வீடு இருக்கிறது. விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது மொத்தமாக 4 பாத்ரூம் மட்டும்தான் இருக்கிறது. இதனால், அவசர கதியில்தான் அந்த அவசர கடன்களை முடிக்கவேண்டியிருக்கிறது. மேலும், குளிக்கவும் சரியான கட்டிடம் இல்லை. நாங்கள் குளிப்பதை, தாளாளர் வீட்டு மாடியில் மறைந்து இருந்து பார்ப்பதும், அதை செல்ஃபோனிலும் படம் பிடித்தும் வைத்திருக்கிறார். அதே போல், இரவு நேரங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது தாளாளர் பாலியல் தொந்தரவு செய்வார். இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவிகளிடம் வெளியே சொன்னால், பள்ளி அசல் சான்றிதழ் தரமாட்டேன். அதே போல் கல்லூரி சான்றிதழும் தர மாட்டேன். ஆள் வைத்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நிருபித்துவிடுவேன். இதனால் பாதிப்பு உங்கள் பெற்றோருக்குத்தான் என மிரட்டி வைத்துள்ளார்.
இதனால் அவருடைய பாலியல் தொந்தரவு நாளுக்கு நாள் வரம்பு மீறிக் கொண்டிருக்கிறது. சில மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதையும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். இதனால் அவர் மீதும் இதற்கு உடந்தையாக இருக்கும் மனைவியான முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்தை தொடர்ந்து இரணியல் காவல் நிலையத்தையும் மாணவிகள் முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நாம் முயற்சி செய்தபோது நமது அலைபேசி அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. அதனால், அந்த கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வரை நேரில் தொடர்புகொண்டு நாம் பேசமுயன்றபோது, கல்லூரி விடுமுறை எனக் கூறி பூட்டிவிட்டனர்.