Skip to main content

குடிமராமத்து என்கிற பெயரில் மணல் கொள்ளை! அ.தி.மு.க.-வினர் கைவரிசை!

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

 kanni kovil kulam thirumarugal nagapattinam

 

டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் குடிமராமத்துத் திட்டம் என்கிற பெயரில், விதிகளை மீறி இருபது அடிக்குமேல் தோண்டி மணல் கடத்தும் அவலம் அதிகரித்தபடியே இருக்கிறது. அந்த வகையில் நாகை அருகே குளத்தில் மணல் கடத்திச் செல்லும் வாகனத்தை மறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகோயில் குளத்தைக் குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஒருவர் அரசின் அனுமதியைப் பெற்று செய்து வருகிறார். தூர்வாருகிறேன் என்கிற பெயரில் குளத்தில் அளவுக்கு அதிகமாக ஆழத்தில் மண் மற்றும் சவுடு மணலை எடுத்துக் கடத்தி விற்று வருகிறார். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் மக்களின் எதிர்ப்பை மதிக்காமல் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் அள்ளி வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி பொக்லைன் இயந்திரத்தையும், வாகனங்களையும் மறித்துப் போராட்டம் செய்தனர். "ஏற்கனவே ஆழமாக இருக்கும் இந்தக் குளத்தில் மேலும் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமான ஆழத்தில் தோண்டி மண் எடுப்பது நியாயமா? இதனால் அருகிலுள்ள வீடுகள் பாதிக்கப்படாதா? அதை அரசும், அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டாமா? உடனே மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் பொதுமக்கள்.

 

அதன் பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. அரசு அனுமதித்த அளவைத் தாண்டி மண் எடுப்பதில்லை  எனவும், குளத்தில் மண் எடுத்துக் கரைகளைப் பலப்படுத்துவது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களைச் சரியான முறையில் அளந்து தோண்டி எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

 

அதன்பிறகே போராட்டத்தைக் கிராம மக்கள் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.