ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை; குற்றவாளிக்கு ஆயுள்

kanjipuram incident ; court verdict

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநில இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ளது தாங்கி எனும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான திருமணமாகாத பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள காட்டில் ஆடுகள் மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண் வீடு திரும்பாததால், அவருடைய குடும்பத்தினர் பல இடத்தில் தேடினர். தேடியும் கிடைக்காததால் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் ஆடு மேய்க்கச் சென்ற இடத்திற்கு அருகில் இருந்த முட்புதரில் சடலமாகக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. அதே தாங்கி கிராமத்தில் ரைஸ் மில் ஒன்றில் வேலை செய்து வந்தபீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞர், அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டதாகப் புகார் ஒன்று வந்தது. இதனால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இந்திரஜித்தை போலீசார் விசாரித்ததில் இதற்கு முன்பே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 49 வயது பெண்ணை கொலை செய்தது இந்திரஜித்தான் என்பது உறுதியானதை அடுத்து வாலாஜாபாத் போலீசார் இந்திரஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இளவரசி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இந்திரஜித்துக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

incident kanjipuram police
இதையும் படியுங்கள்
Subscribe