Skip to main content

கனியாமூர் பள்ளி விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Kaniamoor School Issue: Sealing of 3rd floor; High Court action order

 

கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை முழுமையாகத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளியை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றது. சில மாதங்கள் முன்பு சீரமைப்புப் பணிகள் நிறைவுற்றதால் பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று சீரமைப்புப் பணிகள் முழுமையாக நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் 504 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்கு நேரடி வகுப்புகளைத் தொடங்க உத்தரவிட்டார். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்களைத் தொடங்குவது குறித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பள்ளியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அதனால் மற்ற வகுப்புகளையும் செயல்பட அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகி நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அமைதியான சூழல் நிலவுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையையும் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

 

பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. பள்ளி முழுமையாகத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எல்.கே.ஜி முதல் நான்காம் வகுப்பு வரை பள்ளியைத் திறக்க வேண்டினார். இதனை அடுத்து மார்ச் முதல் வாரத்திலிருந்து எல்.கே.ஜி முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாகவும் நேரடியாகவும் வகுப்புகளைத் திறக்க நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு ஆதரவாக வரும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆதரவான வசதிகளை பள்ளி நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

மேலும், பள்ளியின் ஏ ப்ளாக் கட்டடத்தில் உள்ள 3 ஆம் தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதைத் தவிர அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீக்க உத்தரவிட்டார். 3 ஆவது தளத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீடிக்கும் என உத்தரவிட்ட நீதிபதி நடப்பு கல்வியாண்டு வரை பள்ளிக்கான போலீஸ் பாதுகாப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி அடுத்த கல்வி ஆண்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்த உயிரிழந்த மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.