இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்கந்த சஷ்டி கவசம் குறித்துவீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தவிமர்சனங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலை நிர்வகித்து வந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்டோர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூ-டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனா பேரிடரால் ஏற்கனவே உலகம் தத்தளித்து வரும் சூழலில், தற்போது யூ- டியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிப்புக்கு ஆளாகின்றனர். தனிநபர்கள் சிலர், தங்களுடைய பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகளால் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர்.
வன்முறையைத் தூண்டும் ஆபாச உள்ளடக்கங்கள்அடங்கிய செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது என சமூக வலைதளங்கள் விதிகள் வகுத்துள்ளபோதும், இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன.அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.கடந்த 2018- ம் ஆண்டு,சமூக வலைதளங்களைக் கண்காணிக்க, மாநில சைபர் கிரைம் போலீசாரை வலுப்படுத்த, மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளைப் பின்பற்றி இருந்தால், இது போன்ற சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
கந்த சஷ்டி கவசம் தொடங்கி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட,யூ-டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.