Kanchipuram - Pappanchatram - 177.77 acres of temple land case  - ordered to respond Tamil Nadu government

காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 177.77 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் பெயரில் பட்டா வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள கோவில் சொத்துகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட பாப்பான்சத்திரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோவிலுக்கு 1884-ஆம் ஆண்டு, ஜனவரி 25-ஆம் தேதி, விநாயகா என்பவர், அவருக்குச் சொந்தமான 177.77 ஏக்கர் நிலங்களுக்கு உயில் எழுதிவைத்து, அதைப் பத்திரப்பதிவு செய்திருந்தாலும், 2008-ஆம் ஆண்டு, டிசம்பர் 10-ஆம் தேதி தான், சென்னை உயர் நீதிமன்றத்தால் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உதவி செட்டில்மெண்ட் அதிகாரி முன்பு கோவில் நிர்வாகத்தினர் ஆஜராகி பட்டா கோரியபோது, அது நிராகரிக்கபட்டு, 1956 நவம்பர் 30 முதல், அனாதீன நிலமாக அறிவிக்கப்பட்டது. கோவில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படாதது குறித்தும், கோவில் பெயரில் பட்டா வழங்கக் கோரியும், புற சொத்துக்களைக் கண்டறியக் கோரியும், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, தமிழக அரசு, வருவாய்த்துறை, பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

Ad

கோவிலுக்குச் சொந்தமான, இருங்கோடை மற்றும் பழஞ்சூர் கிராமங்களில் உள்ள சொத்துகளை மீட்கக் கோரியும், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துணைபுரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆகஸ்ட் 17-ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.