Skip to main content

கைக்குழந்தையைக் கொன்ற தந்தை! சந்தேகத்தால் நடந்த சோகம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

kanchipuram madurantakam vippedu five month old baby incident

 

காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கவிபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 23). இவரது கணவர் பெயர் மணி என்கிற ரஞ்சித் குமார் (வயது 24). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெப்பேடு கிராமத்தில் வசித்து வரும் இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

கவிபிரியா தனது அத்தை மகனான மணியை காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகத் தான் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னரே ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் காரணமாக கவிபிரியா கருவுற்றிருந்தார். மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி உள்ளன. கவிபிரியா மீது சந்தேகம் கொண்டு மணி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

 

குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த கவிபிரியாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் குழந்தையுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மணிக்கும் கவிபிரியாவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்படி ஏற்பட்ட தகராறில் மணி கவிபிரியாவை அடித்ததில் அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. அதன் காரணமாக கவிபிரியாவின் பெற்றோர் காஞ்சிபுரம் சென்று அவரை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், இன்று காலை கவிபிரியாவின் வீட்டிற்கு வந்த மணி, அவருக்கு சமாதானம் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு காலை 9 மணி அளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், மணி தனது மனைவியை அடித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் காலைப் பிடித்து சுவரில் அடித்துள்ளார். இதனால் குழந்தையின் பின் தலை மற்றும் முதுகு எலும்பு நொறுங்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மணியை கைது செய்தனர். மேலும், குழந்தையின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.