சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, தனியார் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளதாக, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு புகார் சென்றது. இந்தப் புகார் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், தனியார் அறக்கட்டளை நிர்வாகம், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது.
இதையடுத்து, காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில், செயல் அலுவலர்கள் தியாகராஜன், செந்தில்குமார், குமரன் உள்பட அதிகாரிகள் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று, 32 கிரவுண்ட் பள்ளி கட்டிடம் மற்றும் காலி நிலத்தை அதிரடியாக மீட்டனர். இந்தக் கட்டிடத்தில் உள்ள 13 கதவுகள், 2 இரும்பு கிரில் கேட் ஆகியவை பூட்டப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை முத்திரையிட்டு கோயில் சுவாதீனமாகக் கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 40 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.