Skip to main content

கனல் கண்ணனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு; வாக்குவாதத்தில் இந்து முன்னணி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Kanal Kannan in nagarkovil S.P. office;

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரோட்டா கடை உரிமையாளர் தற்கொலை; பாஜக நிர்வாகி கைது

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 Parotta shop owner issue; BJP leader arrested

 

நாகையில் பரோட்டா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்குத் தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நாகர்கோவில் மாவட்டம் இருளப்புரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் (35). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்த நிலையில் நேற்று அவருடைய ஹோட்டலில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் எனக்கு ஐந்து மகள்கள் ஒரே ஒரு மகன் அவர் ராதாகிருஷ்ணன். 5 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த ராதாகிருஷ்ணன் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். தொடர்ந்து கடனாளியாக இருந்த எனது மகன் குடும்ப சொத்தை விற்க முயன்றார். ஆனால் எனது கணவரின் உறவினர்கள் சொத்தை விற்க முடியாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் கொடுத்த தொல்லையால் என் மகன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்தியதில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்த கடிதத்தில் 'தனது சாவுக்கு பாஜக நிர்வாகியான ரமேஷ், பாலாஜி, பாஸ்கர், கண்ணன் ஆகிய ஐந்து பேரே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் ராஜாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

Next Story

‘ஏய் போடா போ... அப்படித்தான் பண்ணுவேன்’ - பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ரயில்வே ஊழியர்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Railway employee behaved rudely to Tamil Nadu passengers

 

“ஏய் போடா போ போ.. அப்படிதான் பண்ணுவேன்” என தமிழக பயணிகளிடம் ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியரின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழக பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதே சமயம், நாகர்கோவில் ரயில் நிலையத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

 

மேலும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குமிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் இருப்பதால் பயணிகள் மொழி பிரச்சனையில் சிக்கி விவரங்கள் தெரியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் சில ரயில்வே ஊழியர்கள், வேண்டுமென்றே பயணிகளிடம் வம்பிழுத்து வருகின்றனர். டிக்கெட் வழங்குமிடத்தில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள், தமிழக பயணிகள் கேட்கும் விவரங்களுக்கு சரியாக பதில் கூற முடியாமல் சில நேரங்களில் அநாகரிகமாக பேசுவதால் தமிழ்நாடு ரயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணி ஒருவர், கவுண்டரில் இருந்த ஊழியர்களிடம் விவரம் கேட்கும்போது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, விரக்தியடைந்த வடமாநிலத்தவர் அந்தப் பயணியை மாற்று மொழியில் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, அங்கிருந்த பயணிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததால், கவுண்டரில் இருந்த ஊழியர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இது தொடர்பாக அந்த பணியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது மக்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

- சிவாஜி