Skip to main content

திருடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: பொறுப்பாளர்களுடன் கமல் பேச்சு

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
kamal haasan



மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றோன் விருது வழங்கும் விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. அதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் மேற்கு மண்டல மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 
 

இதில் தலைமை தாங்கி பேசிய கமல்ஹாசன்,
 

தமிழக அரசியலை மாற்ற போகும் பெருங்கூட்டம் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கிறது. அந்த கூட்டத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும். நம்மை பார்த்து நன்மை செய்ய அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அந்த ஆசை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்குள் வர வேண்டும்.
 

5 வருடங்கள் முழுவதும் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளதால் 30 வருடங்கள் நாம் பின்தங்கிவிட்டோம். நமது மாநிலத்தின் நிலை பின்தங்கி உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றால் ஒரே நாளில் செய்ய முடியாது. நமக்கு இன்னும் இருக்கக்கூடிய காலம் 2 மாதம்தான். நினைத்தால் அந்த இடத்தை நாம் அடைய முடியும். 
 

நமக்கு பதவி, பணத்தை பார்த்தால் பயம் வந்துவிடுகிறது. ஒருவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினால் திருடன் என்று கத்துகிறார்கள். அதுவே வங்கி மேலாளர் செய்தால் கையாடல் என்கிறார்கள். அமைச்சர் செய்தால் ஊழல் என்கிறார்கள். திருடன், திருடன்தானே. நேர்மையாளன் இருக்கிறார்கள். எனவே நமது கூட்டத்தில் திருடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 

இங்கே கூட்டணி குறித்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். கோழிக்கூட்டில் விழுந்தோமே தவிர நாம் கோழிக்குஞ்சுகள் இல்லை. ராஜாளி கழுகுகள். மறந்து விடக்கூடாது. நாம் இவர்களுடன் இருக்க கூடியவர்கள் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்று கூறி கழுவிய கைகளை மீண்டும் அசிங்கப்படுத்த முடியாது. உங்களை வழிநடத்தி போகிறவன், குறுக்கு பாதையில் கொண்டு செல்ல 37 வருடம் கஷ்டப்படுத்தி இருப்பேனா? குறுக்கு பாதையில் போவதாக இருந்தால் என்னை மேம்படுத்தி கொண்டால் போதுமானது என்று நினைத்து இருப்பேன். இவ்வாறு கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.