கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சக காவலர்களுடன் கல்வராயன்மலைப்பகுதிக்கு கள்ளச்சாராய தடுப்பு பணிக்கு சென்றனர். மலையிலுள்ள முண்டியூர் தாழ்மதூர், மேல் தாழ்மதூர் ஆகிய பகுதிகளில் ரெய்டு நடத்தினார்கள்.
அப்போது தாழ்மதூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கண்டெடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மேல் முண்டியூர் ஓடைப்பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் தனிப்பிரிவு எஸ் ஐ.ரவிக்குமார் கள்ளச்சாராய தடுப்பு சோதனை நடத்தினார். அப்போது 3 பேரல்களில் இருந்த 600 லிட்டர் சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையில் அவ்வப்போது கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்வது ஒரு தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கள்ளத் துப்பாக்கிகள் மலையிலுள்ள பலர் வேட்டைக்கு பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கள்ளத்துப்பாக்கி ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு, காடுகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடிய பலர் காவல்துறையினரிடமும், வனத்துறையிடமும் சிக்கி உள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளத்துப்பாக்கி, கள்ளச்சாராயம் பிரிக்க முடியாத ஒன்றாக உற்பத்தியாகின்றது.