கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ளது ஜி.பி. தாங்கல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது 17 வயது மகள் சிவலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் அவரவர் பெற்றோர்களுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இதில் பெண் வீட்டுத் தரப்பில் தங்கள் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தன் காதலனை மறக்க முடியாத சிவலட்சுமி, நேற்று தன் காதலன் மற்றும் அவரது தாயார் இருவரையும் சந்தித்து அவர்கள் காலில் விழுந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கதறி அழுததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சிவலட்சுமியின் அண்ணன் இதைக் கண்டித்துள்ளார். ஏற்கனவே மனவேதனையில் இருந்த சிவலட்சுமி தனது வீட்டின் மாடியிலுள்ள அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் சிவலட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சிவலட்சுமி தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிவலட்சுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சிவலட்சுமி காதலனின் தந்தை, தாய் ஆகிய 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர். காதலுக்காக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.