Skip to main content

விபத்தில் இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்... அதிர்ச்சியில் இறந்து போன பாட்டி!!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
Kallakurichi

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ளது ஏர்வாய் பட்டினம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயதுள்ள சத்யராஜ், இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சத்யராஜ் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறை தினத்தை சந்தோஷமாக கழிப்பதற்காக தனது நண்பர் இளையபெருமாள் என்பவருடன் டூவீலரில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளார். பின்னர் வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையம் நோக்கி திரும்பிபைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இளையபெருமாள் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

 

உயிரிழந்த சத்யராஜ் உடலை அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சக்தி என்பவர் (எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருபவர்) நேற்று முன்தினம் தனது நண்பர் சின்னையன் என்பவருடன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சாலை விபத்தில் சத்தியராஜ் இறந்ததை பைக்கில் வேலைக்கு சென்ற சக்தி தான் இறந்து போனார் என்ற தகவலை சக்தியின் பெற்றோர் உறவினர்கள் மத்தியில் யாரோ தவறுதலாக தெரிவித்துள்ளனர்.

 

அவர்கள் தங்கள் மகன் சக்திக்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என தகவல் கூறியுள்ளது. இதனால் உயிரிழந்தது தங்கள் மகன்தான் என முடிவு செய்த சக்தியின் பெற்றோர் தீர விசாரிக்காமல் வீட்டுக்கு முன்பாக பந்தல் போடப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் தகவல் கூறி அழைத்து வரச்செய்து மருத்துவமனையில் இருந்து சக்தி உடலை வாங்குவதற்கு தயாராக காத்திருந்தனர்.

 

இந்த நேரத்தில் சக்தியுடன் பைக்கில் சென்ற சின்னையன் சக்தியின் பெற்றோருக்கு போன் செய்து சக்தி தன்னுடன் தான் இருக்கிறார். நாங்கள் வேலை முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் கூறியுள்ளார். சில மணி நேரத்தில் சக்தியும் சின்னையனும் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களை நேரில் கண்ட சக்தியின் பாட்டி 80 வயது மீனாட்சி ஆனந்த அதிர்ச்சியில் இறந்து போனார். உயிரோடு எல்லாம் இருப்பவரை விபத்தில் இறந்ததாக யாரோ சிலர் தவறான தகவலை பரவச் செய்துள்ளனர். நான் சாகவில்லை இதோ உயிரோடு இருக்கிறேன் என்று நேரில் வந்தவரை பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் அவரது பாட்டி இறந்து போனதால் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர். 

 

 

சார்ந்த செய்திகள்