Skip to main content

காதலனை நம்பி விஷம் குடித்த பெண் உயிரிழப்பு! தலைமறைவான வாலிபர் கைது!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

kallakurichi woman incident man arrested


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வேல்முருகன் லதா என்ற பெண்ணை, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், லதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் இடையே முறையற்ற நட்பு இருந்து வந்துள்ளது. இதனால், இரு குடும்பத்திலும் கடந்த பல மாதங்களாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

 

நேற்று முன்தினம் இரவு ஏ.குமாரமங்கலம் அய்யனார் கோவில் பின்புறமுள்ள சிறுபாக்கம் ஏரிப் பகுதியில் இருந்து லதாவின் வாயில் நுரை தள்ளிய நிலையில், இருசக்கர வாகனத்தில் லதாவை கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழுமலை சேர்த்துள்ளார். 


அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்த ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் லதாவின் உறவினர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல்நிலை சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற சிறுபாக்கம் ஏரிப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

 

அங்கு லதாவின் செருப்பு, மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், விஷ மருந்து ஆகியவை கிடந்துள்ளன. அதைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர் போலீசார். லதாவின் மரணம் குறித்து அவரது கணவர் வேல்முருகன் உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரின் உறவு பற்றி இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் இருவரும் நிம்மதியாக  வாழ முடியாது. எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்ளவது என முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று இரவு சிறுபாக்கம் ஏரிப் பகுதிக்கு லதாவை ஏழுமலை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் விஷமருந்தி சாவது என்று முடிவு செய்துள்ளனர். குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து ஏழுமலை அதை முதலில் லதாவுக்கு கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் வார்த்தையை நம்பி விஷத்தைப் குடித்துள்ளார் லதா. சிறிது நேரத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.

 

cnc

 

ஏழுமலை தானும் விஷம் குடிப்பதாக லதாவை நம்பவைத்துள்ளார். ஆனால், ஏழுமலை விஷத்தைக் குடிக்கவில்லை. வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குப் போராடிய லதாவை டூவீலரில் வைத்துக் கொண்டுவந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாக ஏழுமலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.