Skip to main content

வாலிபர் இறப்பில் சந்தேகம்... புதைத்த உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை...!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

kallakurichi Suspicion over the death of a youth .. police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம், காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவருக்குக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 
 

பாஸ்கருக்கு சூதாட்டப் பழக்கம் இருந்துள்ளது. பாஸ்கர் கடந்த நவம்பர் 19 -ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த சில நண்பர்களுடன் சென்று சூதாடிவிட்டு, இரவு 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார். மறுநாள் தனக்குக் காது வலிப்பதாகவும் உடல் வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்குக் காரணம், இரண்டு நபர்கள் சூதாடும்போது என்னை தாக்கிவிட்டனர் என்று மனைவிடம் கூறியுள்ளார். 


பின்னர் அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர். கடந்த 24 -ஆம் தேதி தலைவாசல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இறப்பு காரியத்திற்கு, பாஸ்கரும் அவரது மனைவியும் சென்றுள்ளனர். அங்கும் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. உடனே அங்கிருந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 25 -ஆம் தேதி, காலை அவர் உயிரிழந்துவிட்டார். 


இதையடுத்து பாஸ்கரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்துவிட்டனர். பாஸ்கரின் மனைவி, தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கச்சிராபளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், வருவாய்த்துறை மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், மருத்துவக் குழுவினர் புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை தோண்டி எடுத்து, மறு பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளனர். மேற்கொண்டு போலீசார், பாஸ்கரை தாக்கியது யார், என்ன காரணம், தாக்குதல் காரணமாக இறந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் கச்சராபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.