Skip to main content

காலணி தைக்கும் தொழிலாளி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

kallakurichi sangarapuram labour incident polce investication stared

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 45). இவர் சங்கராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையோரம் காலணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உழைப்பின் மூலம் மனைவி மற்றும் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சங்கராபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு பின்புறம் ரத்தக் காயங்களுடன் துரை சடலமாகக் கிடந்துள்ளார்.

 

இந்நிலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது காலணி தைக்கும் துரை என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து துரை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இதை அறிந்த துரையின் உறவினர்கள், துரையை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர். எனவே அவரது வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

சம்பவம் குறித்து விரைந்து விசாரணை செய்து துரையின் இறப்பு தற்கொலையா, கொலையா அப்படி கொலையாக இருந்தால் உரிய விசாரணை செய்து எதற்காக கொலை செய்யப்பட்டார். அவர் உடலில் ரத்த காயங்கள் எப்படி வந்தது என்பது குறித்து விரைவில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது இறப்பு குறித்து நிச்சயம் தெரிய வரும். அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சங்கராபுரம் நகரின் மையப் பகுதியில் சாலையோரம் காலணி தைத்துப் பிழைப்பு நடத்திய துரை என்பவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.