Skip to main content

மாணவியின் உடல் நல்லடக்கம் - அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Kallakurichi private school girl burial minister CV Ganesan

 

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சக்தி மெட்ரீக்குலேஷன் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோரும், உறவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாணவியின் மரணம் தொடர்பாக போராட்டம் பெரும் அளவில் வெடித்து, வன்முறையாக மாறி பள்ளிக்கட்டடம், வாகனம், போலீஸ் வாகனம் ஆகியவற்றுக்கு தீவைக்கப்பட்டது. அதேபோல், காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

 

அதன்பிறகு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவிட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதேசமயம், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மாணவியின் உடலை இன்று(23ம் தேதி) பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், இன்று காலை 11 மணிக்குள்ளாக மாணவியின் உடலை அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது. 

 

அதன்படி, இன்று காலை 7 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஜஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சி.வி.கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடலை, தங்கள் சொந்த ஊரான கடலூர் மாவட்ட பெரியநெசலூர் கிராமத்திற்கு பெற்றோர் கொண்டு சென்று அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்குகளைச் செய்தனர். பெரியநெசலூர் கிராமத்தில் அசம்பாவிதங்களும், வன்முறையும் நடைபெறாமல் தடுப்பதற்கு 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.  பெரியநெசலூர் கிராமத்தின் எல்லையில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில், மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 

 

Kallakurichi private school girl burial minister CV Ganesan

 

இன்று காலை 10.45 மணி அளவில் மாணவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது. இதில், அவரின் உறவினர்களும், ஊர் மக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாணவியின் உடலுக்கு இடுகாட்டில் செய்யவேண்டிய இறுதி மரியாதையை அவரது குடும்பத்தினர் செய்தனர். மேலும், அமைச்சர் சி.வி.கணேசன், “கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, நம் அன்பு மகள் மாணவி ஸ்ரீமதி நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார். அந்த மாணவியின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவிக்கு இடுகாட்டில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவி நல்லடக்கத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.