கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்படை போலீசார் வடபொண்பரப்பி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கப்பனூர் ஏரிக்கரையில் மதுவிலக்கு சம்பந்தமாக கண்காணித்துக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் தலையில் சாக்கு மூட்டையுடன் வந்தார். அவரைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்த, அவர் தப்பி ஓட முயன்றுள்ளார். எனவே அவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், ஒரு சந்தன மரத்தை 20 துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் வைத்துக்கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேற்படி நபரை சட்டவிரோதமாகச் சந்தன மரத்தை வெட்டி கடத்திய குற்றத்துக்காக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் திருப்பத்தூர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் சந்தனக்கட்டை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவருகிறது. வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் சந்தனக் கட்டைகள் ஒப்படைக்கப்பட்டது. வெட்டப்பட்ட சந்தனக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் எனக் கூறப்படுகிறது.