கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலையை ஒட்டி உள்ளது மேல் பூண்டி தக்கா ஏரிப்பகுதி. இங்கு நேற்று பிற்பகல் ஆடு மாடுகள் மேய்ப்பதற்காக அப்பகுதி மக்கள் ஓட்டிச் சென்றனர். அவர்கள் அப்பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கருவேல மரத்தின் கீழே ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் அந்த ஆண் உடல் கிடந்த இடத்துக்கு சென்று அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பழனிசாமி வயது 40 என்பதும், இவர் கள்ளக்குறிச்சி மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த 2 தினங்களாக பழனிசாமி வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தியாகதுருகம் மலை அருகே உள்ள ஏரி பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்து பகுதியை நெரித்தற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.