கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி தந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
19 வயது நிரம்பாத சவுந்தர்யாவை கடத்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமணம் செய்ததாக கூறி, சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (08/10/2020) விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள், மணப்பெண் சவுந்தர்யாவை நீதிமன்றத்தில் இன்று (09/10/2020) காலை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபுவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுந்தர்யா ஆஜரானார். அப்போது சவுந்தர்யா, "தன்னை யாரும் கடத்தவில்லை. நான் முழுவிருப்பத்துடனேயே எம்.எல்.ஏ. பிரபுவை திருமணம் செய்துக்கொண்டேன்" என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வாக்குமூலம் அளித்தார். மேலும் தந்தையுடன் பேசிய பிறகு கணவருடன் செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததையடுத்து, அனுமதி அளித்த நீதிபதிகள் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுவாமிநாதன், "எனது மகள் சவுந்தர்யாவை மூளை சலவை செய்துள்ளனர்; பிரபு எம்.எல்.ஏ. கட்டுப்பாட்டில்தான் சவுந்தர்யா இருக்கிறார். அரைமணிநேரம் பேசியும் என் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முறையாக வந்து பெண் கேட்டதாக கூறுவது தவறு. வழக்கு தொடுக்க வேண்டாம் என பணம் கொடுத்தும் மிரட்டினர். 15 வயதிலிருந்து காதலித்ததாக சொல்கிறார்; திருமண வயதை எட்டும் வரை காத்திருந்து திருமணம் செய்துள்ளார்" என்றார்.