Skip to main content

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை... கைது செய்யக்கோரி இறந்தவர் உடலோடு சாலை மறியல் செய்த உறவினர்கள்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

அருகே கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் இறந்தவர் உடலுடன் சாலை மறியல்.

 

ரிஷிவந்தியம் அருகே கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் இறந்தவர் உடலுடன் சாலை மறியல்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ளது ரெட்டியார்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மனோஜ் (21) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் மரூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் டேனியல் என்பவரது மகன் ஸ்டீபன் (27) இருவரும் பகண்டை கூட்ரோடு பகுதியில் அடிக்கடி சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கார் டிரைவராக வேலை செய்து வருகிறார் ஸ்டீபன்.

 

இந்நிலையில் மனோஜ் தனது அப்பா அம்மாவிடம் தனக்கு பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் புதிதாக பைக் வாங்குவதற்கு பணம் அதிகம் செலவாகும். எனவே எட்டாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து பழைய பைக் வாங்கிக் கொள்ளுமாறு கூறி உள்ளனர். மனோஜ் அந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தைத் தனது நண்பர் கார் டிரைவரான ஸ்டீபன் இடம் கொடுத்து அவருக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் பழைய பைக் ஒன்று வாங்கித் தருமாறு கூறியுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்ட ஸ்டீபன் விரைவில் பைக் வாங்கித் தருவதாக உறுதி கூறி உள்ளார். ஸ்டீபன் எப்படியும் பைக் வாங்கிக் கொடுத்து விடுவார் என்று மனோஜ்  சந்தோஷத்தில் இருந்தார். 

 

ஆனால் கடந்த இரண்டு மாதத்துக்கும் மேல் கடந்தும் ஸ்டீபன் மனோஜ்க்கு பைக் வாங்கித் தரவில்லை. மனோஜின் பெற்றோர் அவர் பைக் வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை; கொடுத்த பணத்தை வாங்கி வா என்று கூறியுள்ளனர் அதன்பிறகு மனோஜ் ஸ்டீபனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு, ‘எனது பெற்றோர்கள் திட்டுகின்றனர் பைக் தராவிட்டாலும் பரவாயில்லை நான் கொடுத்த 8,000 பணத்தைத் திருப்பிக் கொடு’ என்று கேட்டுள்ளார். 

 

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்டீபன் மாடம் பூண்டி வனப் பகுதிக்கு வருமாறு மனோஜை போனில் அழைத்துள்ளார் அங்கு இருவரும் சந்தித்துள்ளனர் அந்த வனப்பகுதியில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வனக் காவலர் ஒருவர் இங்கு மது குடிக்கக்கூடாது வனக் காட்டில் கும்பலாக வந்து மது குடிப்பவர்களால் கிரிமினல் சம்பவங்களில் நடக்கின்றன. எனவே இங்கு மது குடிக்கக்கூடாது. கிளம்புங்கள் என்று என்று எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.

 

இதனிடையே இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் மனோஜ் பணம் கேட்டு ஸ்டீபனிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்டீபன், மனோஜ் கழுத்தை நெரித்தும் கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

 

இரவு வெகு நேரம் ஆகியும் தங்கள் மகன் வீட்டிற்கு வராததால் மனோஜின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டுப் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மகேஷ், ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரித்தனர். அப்போது ஸ்டீபன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதுடன் காவலருடன் சேர்ந்து மனோஜ் மணம்பூண்டி வனப்பகுதியில் தேடியுள்ளார். 

 

காவல்துறை  தேடிக்கொண்டிருந்த போது அதைப் பார்த்த வனக் காவலர், காவல்துறையினரிடம் மனோஜ் - ஸ்டீபன் இருவரும் அந்தக் காட்டில் சேர்ந்து மது அருந்திய விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு ஸ்டீபன் மீது சந்தேகம் அதிகரித்து, அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது மனோஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

 

இதையடுத்து அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே மனோஜ் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது ஸ்டீபனை பொதுமக்கள் தாக்கியதில் சிறிது காயம் ஏற்பட்டதால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து திருப்பாலபந்தல் காவல் நிலையத்திற்கு மேலும் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

 

திங்கட்கிழமை மாலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் மனோஜ் உடலை வீட்டுக்கு கொண்டுவந்தனர்.

 

நேற்று காவல்துறையினர் ஸ்டீபனைத் தடயங்களைக் காண்பதற்காக கொலை செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி தடயங்களைக் கைப்பற்றினர்.

 

ஆனால் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்று கூறி ரெட்டியார்பாளையத்திலிருந்து பிரேதத்தை எடுத்துக்கொண்டு பகண்டை கூட்டு சாலையில் உள்ள நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

 

தகவலறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம் என்று கூறியதின் பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது