கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுமீதான விசாரணையில் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகிய மூவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் மேலும், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திக்காவுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மத்தியச் சிறையிலிருந்த பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் இன்று வெளியில் வந்தனர். பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரண்டு ஆசிரியர்கள் சேலத்திலும் தங்கி இருந்து சிபிசிஐடி போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை சிறையிலிருந்து ஐந்து பேரும் வெளியே வந்தனர். பள்ளியிலிருந்து வந்த மற்ற ஆசிரியர்கள் ஜாமீனில் வெளிவந்தவர்களை காரில் அழைத்துச் சென்றனர்.