Kallakurichi  incident- Inquiry Report Filed!

Advertisment

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகி ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கிருத்திகா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறை இன்று (29/07/2022) சென்னை உயர்நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கள்ளக்குறிச்சி வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை. மாணவி மரணம் தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இரு வாரங்களில் நிலைமை சரி செய்யப்படும். 63 யூடியூப் தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 27- ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது என்று விளக்கம் அளித்தார்.

இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தர உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.