
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 52). இவர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிடாகம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் எலவனாசூர்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 73 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து மொத்தம் 91 லட்சத்து 54 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
அரசு வேலை பெற தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு அரசு அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தர கூறி அந்த பணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கரூர் வைஸ்யா பேங்க் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வரும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சிவா (வயது 40) என்பவருக்கும், சென்னை பாடியநல்லூர் ஆட்டந்தாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 49) என்பவருக்கும் பரிவர்த்தனை செய்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராம உதவியாளர் செல்வம் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் என்பவர் பெயரைக் கூறி ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.