Skip to main content

காதலனுடன் சென்ற மகள்..  மீண்டும் மீண்டும் அவமானம்... மனமுடைந்த தந்தை தற்கொலை...

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

Kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ் நாரியப்பனூரைச் சேர்ந்தவர் 42 வயது முருகேசன். இவரது மகள் 19 வயது சரண்யா. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 28 வயது மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். மகளின் முறையற்ற காதலை ஏற்க மறுத்ததோடு மகளைக் கண்டித்து வந்துள்ளார் முருகேசன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் சரண்யாவை அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்யும் முடிவுடன் அழைத்துச் சென்றுள்ளார். 

 

மணிகண்டன் சரண்யாவை திருமணம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது, முறையற்ற செயல் என்று மணிகண்டன் மனைவி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரையடுத்து ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கும் போது, ஒரு இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்யும் நோக்கத்தோடு அழைத்துச் சென்ற மணிகண்டனை மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

 

சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன், மீண்டும் காதலி சரண்யாவை தன் மனைவி மற்றும் சரண்யாவின் பெற்றோர் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ஆசையோடு வளர்த்த நமது மகள் இப்படித் தெரிந்தே பாழும் கிணற்றில் விழுவது போல் ஏற்கனவே திருமணமான நபருடன் மீண்டும் மீண்டும் ஓட்டம் எடுத்தது சரண்யாவின் தந்தை முருகேசனுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த முருகேசன் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து போனார் என்று தெரிவித்துள்ளனர். 

 

பெற்ற மகளை திருத்த முடியாத நாம், உயிரோடு இருந்து அவமானத்தைச் சுமக்க வேண்டுமா என்று முருகேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதல் என்ற பெயரில் இளம்பெண்களை சீரழிக்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்