Skip to main content

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

kallakurichi district youth incident police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது மங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் அஜித் (வயது 26). இவர் நேற்று முன்தினம் (07/04/2021) மாலை தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி காந்தி, கண்டியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோருடன் அருளம்பாடி அருகே முகுந்தா நதி கரையில் உள்ள ஒரு காட்டுக்கோவிலின் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதை மூவருக்கும் அதிகமானதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த தகராறின்போது அஜித்தைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அவரது அருகில் மூவரில் ஒருவரான சின்னராஜ் படுத்தபடியே போதை ஏறிய நிலையில் உளறிக்கொண்டிருந்துள்ளார். அந்த வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள், அஜித் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அவரது அருகில் குடிபோதையில் ஒரு இளைஞன் உளறிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து உடனடியாக மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் உளறிக்கொண்டிருந்த சின்னராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சம்பவ இடத்தில் மூன்று பேர் மது அருந்தியுள்ள நிலையில் சஞ்சீவி காந்தி மட்டும் காணவில்லை. இதனால் அவர் அஜித்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்ற கோணத்தில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதேபோல் அஜித் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.