tasmac

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மந்தக்கரை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு வயது 26. இவருக்கு புதுத் தெருவைச் சேர்ந்த குருபிரசாத், விக்னேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் நண்பர்கள். பெரியசெவலை ஈரோடு அருகே உள்ள அஷ்டலட்சுமி நகர் விரிவாக்கப் பகுதியில் புளிய மரத்தினடியில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்து சைடிஷ்களுடன் மது சாப்பிட்டனர்.

கடந்த 2 மாதமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுபானங்கள் சரிவர கிடைக்காததால் மதுபானம் சாப்பிட முடியவில்லை. அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளும் விதத்தில் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர். நண்பர்கள் அனைவரும் அளவுக்கு மீறி மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குருபிரசாத் அருகிலிருந்த பீர்பாட்டிலை உடைத்து வெங்கடேசன் மீது குத்தியுள்ளார். அங்கிருந்த கல்லை எடுத்தும் அவரை தாக்கியுள்ளார்.

இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தார். உடனடியாக நண்பர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளார். அப்போதும் வெங்கடேசன் மீதுள்ள தீராத கோபத்தால் குருபிரசாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவ உதவியாளர் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து மீண்டும் வெங்கடேசன் மார்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். இப்படி தொடர் தாக்குதலால் வெங்கடேசன் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

நண்பர்களின் மது விருந்து கொலை முயற்சியில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.