Skip to main content

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அலுவலகங்கள் அமைக்கும் பணி தீவிரம்! 

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகம் வரும் 1ம் தேதி முதல் தற்காலிக வாடகைக் கட்டடத்தில் துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 25- ம் தேதி புதிய மாவட்டத்திற்கான எஸ்.பி., நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதுகுறித்து, குமரகுரு எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
 

அதன் பேரில் கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எல்லை வரையறை, மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யும் பணிகளுக்காக தனி அதிகாரி கிரண்குராலா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லை வரையறைகள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம், கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் செப்டம்பர் 1- ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

kallakurichi district individual collector office and sp office arranged




கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே தற்காலிக வாடகை கட்டடத்தில் கலெக்டர் அலுவலகமும், பிற அலுவலகங்களும் செயல்பட உள்ளது. இதேபோன்று, மாவட்ட எஸ்.பி அலுவலகம், நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அருகே தற்காலிகமாக அமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இல்லையேல் மாற்று இடத்தில் செயல்படுத்த தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக வரும் 25- ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென தனியாக எஸ்.பி. நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவர் நியமிக்கப்பட்டவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்நிலையம் எல்லை வரையறுக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் தனி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்.
 

ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரம் அமைய உள்ள இடம் மற்றும் எல்லை வரையறை குறித்து அறிவிப்பு வெளியிடுவதை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக அனைத்து துறை அலுவலகங்களுடன் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. ஓரிரு மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையிடம் மற்றும் எல்லை வரையறுக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    



 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.