Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; வாட்ஸ்ஆப் ஆடியோவால் சிக்கிய பெண்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

kallakurichi district chinnasalem shopkeeper incident for whatsapp audio viral 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது மனைவிக்கு ஆடியோவில் பேசி வாட்ஸ்ஆப்பில் தகவலை அனுப்பி விட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆடியோவில் ரமேஷ் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து ரமேஷின் அண்ணன் செந்தாமரைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷ் ஆடியோவில் பேசியதில், "23 லட்சம் பணம், 13 சவரன் நகை ஆகியவற்றை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளேன். அவருக்காகத்தான் கடன் வாங்கினேன். ஆனால், தற்போது அவர் என்னை மிரட்டுகிறார். அவரால் நமது பிள்ளைகளுக்கு ஆபத்து. பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.

 

இந்த ஆடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷின் மளிகை கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தன் கடையில் வேலை செய்த கவிதாவுடன் ரமேஷ் பழகி வந்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் ரமேஷ் கவிதாவுக்கு 23 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி, தனது மனைவியின் 13 பவுன் நகையையும் கவிதாவுக்கு கொடுத்துள்ளார். இதன் காரணமாக கவிதாவும் ரமேஷும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். மேலும், ரமேஷ் தனது குடும்பத்தை மறந்து கவிதாவுக்காக தனது பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கவிதா வேறொரு ஆண்நண்பருடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரமேஷை புறக்கணித்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவிதாவை சந்தித்துக் கேட்டுள்ளார். அப்போது கவிதா ரமேஷை மிரட்டி உள்ளார். இதனால், தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு ரமேஷ் கேட்ட போது, "பணம் மற்றும் நகைகளைத் தர முடியாது. மீறி பணம் கேட்டால் உன் குடும்பத்தினரும் பிள்ளைகளும் பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்" என்று மிரட்டி உள்ளார். இதன் பிறகு ரமேஷ் தனக்கு கவிதா துரோகம் செய்ததாகக் கருதி, கொடுத்த பணமும் நகையும் போச்சு... கவிதாவும் துரோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் மிரட்டுகிறார். அவரிடம் பணம் உள்ளதால் எதையும் செய்வார். எனவே, தனது மனைவி, பிள்ளைகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த கவிதா ரமேஷை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.