Skip to main content

முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் கொலை; சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

kallakurichi college student incident minor boy involved

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர், தமிழ்ச்செல்வி தம்பதியர். தமிழ்ச்செல்வி அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவியில் உள்ளார். இவரது மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19). இவர் வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகன் ஸ்ரீ இரவு அதிக நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. ஜெகன் ஸ்ரீயை பல்வேறு இடங்களுக்கும் உறவினரின் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை ஜெய்சங்கர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 32), அபிலரசன் (வயது 25), ஆகாஷ் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகன் ஸ்ரீயை அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் கொலை செய்து புதைத்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த கார்த்திகை தீபத்தின் போது ஊரில் திருவிழா நடந்தது. அப்போது ஐயப்பன், ஜெகன் ஸ்ரீ ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகன் ஸ்ரீ ஐயப்பனை பலர் முன்னிலையில் அடித்துள்ளார். தன்னை விட வயதில் சிறியவன் தன்னை பலர் முன்னிலையில் அடித்ததை ஐயப்பன் பெருத்த அவமானமாகக் கருதியுள்ளார். இதற்காக ஜெகன் ஸ்ரீயை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய ஐயப்பன் ஜெகன் ஸ்ரீ மீது விரோதத்தில் இருந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, கள்ளக்குறிச்சிக்கு சென்று மது பாட்டில்கள், கொலை செய்வதற்கான கத்தி போன்ற ஆயுதங்களை வாங்கி வந்துள்ளனர்.

 

இதையடுத்து முன்விரோதத்தை வெளிக்காட்டாமல் ஜெகன் ஸ்ரீயை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர். அவரும் பகையை மறந்து அவர்களுடன் காப்புக்காடு வனப்பகுதிக்கு மது குடிக்கச் சென்றுள்ளார். அளவுக்கதிகமான மதுவை ஜெகன் ஸ்ரீயை குடிக்க செய்து அவர் நிலைதடுமாறி தள்ளாடிய நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட நால்வரும் பீர் பாட்டிலால் ஜெகன் ஸ்ரீ தலையில் அடித்தும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். அவர் உடலில் உயிர் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதே இடத்தில் குழி தோண்டி உடலை புதைத்தனர். இதை ஐயப்பன் தலைமையிலான நால்வரும் போலீசாரிடம் வாக்குமூலம் ஆக அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர்கள் நால்வரையும் அழைத்துச் சென்று காப்புக்காட்டில் ஜெகன் ஸ்ரீ புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டச் சொல்லி, அந்த இடத்தில் தோண்டி உடலை வெளியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த வரஞ்சரம் உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகள் நால்வரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். திருவிழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.